Sunday, 8 July 2018

கோமதி சதரத்ந மாலை



திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
கோமதி சதரத்ந மாலை
எழுதியவர் திரு. ஈஸ்வர மூர்த்தி பிள்ளை அவர்கள் 

காப்பு
சங்கரன் கோயிலமர் சங்கர லிங்கனார்
பங்கிலுறு கோமதித்தாய் பாதமலர் - பொங்கு தமிழ்
யாப்பலிங் கேத்துவேன் யானைமுகத் தெய்வமே
காப்பாக வுன்பொற் கழல்.

நூல்
பாரதமே திருநாடு பரசிவமே பரமபதி
யாரணமே யாகமமே யருடருநூ லதிற்சுரக்குஞ்
சாரமதே சைவமெனுஞ் சற்சமய மெனநாயேன்
றேரவருள் செய்தனையே சீராசைக் கோமதியே.  1

கதிரோனின் புதிநேர்வன் கதிர்நோவை நீயன்றோ
மதிவாணர் போல்வருன மாயையென்ப ரதனாலுன்
பதியாரைச் சடமெனவும் பகராமற் பகர்வாரா
யதிசோக முறுவரந்தோ வருண்ஞான கோமதியே, 2

ஊனுடலே யுயிராகு முலகேவீடாகுமெனு
மீனமதிக் கிரையாய்நா னிறவாமு னின்றளில்
யான்றவென் றலைசார்த்தி யின்பாரு நாளுளதோ
கானமரு மென்கூந்தற் கலியாணி கோமதியோ. 3

ஆங்கிலமே திராவிடமே யாரியமே யாம்பலவும்
பாங்குபெறக் கற்றாலும் பயனென்கொல் சுமையன்றே
தேங்கமழுன் சீபாதஞ் சிந்திக்கக் கற்பதொன்றே
யோங்குநல மென்றுரைத்தா யுலகளிக்குங் கோமதியே. 4

என்னன்னை தந்தையன்பா லென்னுடலை வளர்த்ததுபோற்
பொன்னன்ன நின்சீரைப் புரிந்துரைக்குந் திறலினையும்
நன்னரிவண் வளர்த்திட்டார் நான்செயுங்கைம் மாறுளதோ
வென்னுளமு மெவருளமு மிருந்தாளுங் கோமதியே. 5

ஆண்டறுப தாகவென யாதரித்த வாறேபோல்
வேண்டுவன தந்தின்னு மேதினியிற் காவாயோ
பூண்டவிரும் வடிவாளே புந்தியிலே னஞ்சுகிறேன்
றாண்டரிய பிறப்பறுக்குந்தனியமுதாங் கோமதியே. 6

புத்திரபுத்திரிமாரும் பொருளாக வேண்டுமெனி
லத்தனையும் புண்ணியநானாற்றிடுதல் வேண்டாவோ
வித்தனையு மவ்வறந்தா னியற்றியிலே னையோநா
னெத்தனையுங் கீழெனினு மெனக்கிரங்கு கோமதியே. 7

பலகலைகள் கற்றாலென் பகுத்தறிவு பெற்றாலென்
னுலகநடை சிறந்தாலெனுபகாரம் புரிந்தாலென்
மலமுழுது நீங்கியின்ப மருவுவதை வேண்டாத
கலதிகளுக் குயிருளதோ கட்டழகி கோமதியே. 8

பீடேறுன் பொருட்புகழைப்பேசிமகிழ் தேத்தாத
நாடேதான் மொழியேதா னவினுறான் மானுடந்தான்
காடேயாஞ் சலசலப்பாங் கடிநூலாம் விலங்கேயா
மிடேயோ வெடுப்பேயோ வில்லாத கோமதியே. 9

அணியாருன் விழாநாளி லலங்காரம் பலகொண்டு 
மணிவீதி முழக்கோடு வருநின்னைக் கண்டக்காய் 
பணியாத தலைபணியும் பாடாத வாய்பாடுந் 
தணியாத சிந்தையுந்தான் றணிந்தொடுங்குங் கோமதியே. 10

சிவபூசை யென்முன்னோர் செய்பயனா னாயேனு 
மவமேநாள் போக்காமே யானமட்டி னின்புகழைத் 
தவறாமே படித்திடுவேன் சாற்றிடுவே னெழுதிடுவே 
னுவமானங் கடந்தாளே யுயக்கொள்வாய் கோமதியே. 11

தரித்திரமே யிடையூறத் தரித்திரந்தா னிங்கிடிலோ 
திருத்தியுறத் தொழலாநின் சேவடியை யென்பாரா 
வருத்தமுளாருனமறந்திங் கரக்கரென வலைவதெனே 
யுருத்திரனாருௗமகலா வோவியமாங் கோமதியே. 12

புத்தழகி யானாலென் பொற்றுகில்பூணணிந்தாலென்
வித்தையிலும் பதவியிலும் மிகுந்தாலென் கற்பிலதே
லித்தரையிற் பேயவளே யெத்தகைய சிறப்பினனு 
மத்தகைய ளாவானு னடிமறந்தாற் கோமதியே. 13.

யாதுபொரு ளியாருற்றா ரெதுவுமிலே னெதிர்காலஞ் 
சோதிடரோ துன்பமெனக் குண்டென்று சொல்கிறார் 
மாதரசி யுன்னேவல் வழிகிரக சஞ்சார 
மாதலினா லபயமெனக் களித்தருண கோமதியே. 14

பாலனெனக் குமரனெனப் பலபருவத் தனயருக்கு 
வாலமுதம் வெவ்வேறாய் வழங்குவணற்றயதுதான் 
சீலமறும் வஞ்சகமோ சிறியேமுக் கவள்செயல்போற் 
சாலவரு ணிபுரித றானுமன்றோ கோமதியே. 15

படங்காணப் போவாரே பரமசிவன் வீற்றிருக்குந் 
தடங்கோயில் சூழாரே தனிமுத்தி யிந்தாவென். 
றடங்கலுநீ யழைத்தாலு மபக்குவர்தான் வாங்குவரோ
மடங்காதி நின்றார்க்கே வாய்ப்பத்ன்றோ கோமதியே 16

மதபேதமிருப்பதற்கு மானிடரி னறிவுபல 
விதமாவ தேயேது விளங்குனரு ளவர்க்கெல்லாம் 
பொதுவாகு மென்பதையே புகன்றந்தப் பேதத்தை 
மதியாத மதியுமொரு மதியாமோ கோமதியே 17

பகவதியே மாதேவி பவானிபரா சத்திசிவை 
நகமகளே யைமவதி நாரணியே ஈசையே 
ககனமுயர் பிராமியுமை கெளரிதிரு வீசுரியே 
தகவுறுமிப் பெயர்களெற்குத் தாரகமாங் கோமதியே18

சொன்னாலும் வாயினிக்குஞ் சொலக்கேட்டாற் காதினிக்கும் 
பன்னாளுஞ்சிந்தித்தாற் பரந்தினிக்குஞ் சிந்தையெலாம் 
பொன்னாளுங் கலையாளும் புவியாளும் புகழ்ந்தேத்து 
மன்னாயுன் சரிதங்க ளற்புதமாங் கோமதியே 14

பேய்வாயிற் பட்டாரும் பித்துமிகப் பெற்றாரும் 
நோய்சால வுற்றாரு நுழைந்துனருட் சன்னிதியிற் 
றாய் நீயே சரணமெனத் தவங்கிடந்து சுகமுறுவார் 
வாய்மையிது முக்காலு மாண்புநிறை கோமதியே 20

ஆறாறு தத்துவமு மாகிநிற்கும் பேரருளே 
யாறாறு தத்துவமு மடக்கிநிற்கும் பேரொளியே 
யாறாறு தத்துவமு மலைத்திடவிங் குனமறந்தே 
னாறாறுங் கடத்தியெனை யாட்கொள்வாய் கோமதியே 21

அறிந்திடுவாய் தானேநீ யறிவித்தா லறியுமுயி 
ரறிந்திடுவ வல்லபிற வறிவித்த போதேனு 
மறிந்திடுநர் செய்ந்நன்றி யயர்த்திலரே யாமாயி 
னறிந்திடுமா செய்தவுன யயர்ப்பாரோ கோமதியே 22

திருமேனி யுயிரென்னத் தேகமென விரண்டின்றி 
யொருஞானப் பிழம்பாவ துனக்குத்த முடலுயிர்போற் 
கருவாரும் புலையுடம்பிற் கட்டுண்ட வாசனையாற் 
றுருவாத ரதைக்கூறிச் சோகாப்பர் கோமதியே 23

சிவபெருமானின்கணவர் திருமானி னையரென்ப 
ரிவரிருவ ரொருதேவே யெனக்காட்டச் செய்தனையாந் 
தவமதனை யெனவயலார் சரிதமொன்று புனைந்திட்டா 
ரவமுனது பெண்மைக்கஃதாகாதோ கோமதியே.  24

அரியொருகா லிருராம ரானான்சூர் பன்மனெனு 
மிருவரொரு சூரபன்ம னென்றானா ரவ்வரிபோ 
லரியரரா வான்சிவனே யச்சூரன் பன்மன்போ 
லரியரரோ சிவனென்று மாகாரே கோமதியே.  2.

சங்கரநாராயணன்பாற் சார்ந்திருக்கு நாரணன்றா 
னிங்குவரு வயிணவத்தினிறையல்ல னவ்விறைக்கும் 
டங்கியதை யியக்குசிவ சத்திகொளு மாண்கோலம் 
துங்கமறை யவ்வாறு சொற்றிலதோ கோமதியே 26

சங்கரநாராயணனே தாணுமாலயனிவைதான் 
மங்கலறச் சிவநாம வரிசையிற்றான் வந்திடுமே 
சிங்கலிலாச் சிவன்சர்வ தேவமய னெனச்சுருதி 
யிங்கறிஞருளங்கொள்ள வேத்திலதோ கோமதியே 27

நாரணனே யிலக்குமிசெய் நற்றவத்தா லவள்முன்னே 
நாரணசங் கரனாக நற்காட்சி தந்தானென் 
றாரணமோ நாரணற்கோ ராலயமோ சான்றுண்டா 
பூரணியே வளமாரும் புன்னைமகிழ் கோமதியே 28

பரமசிவன் பத்தினியே பரந்தாமன் சோதரியே 
கரமுகவ னாறுமுகன் கனிந்தேத்து மாதாவே 
வரமுதவு நீறக்க மணியணிவா ருளக்கோயி 
நிரமுறவீற்றிருந்தருளுந் தெய்வதமே கோமதியே. 29

தவவேடம் நீதாங்கிச் சங்கரனை யுளத்திருத்தி 
யுவமான மிறந்ததவ முஞற்றிநின்றா யுவந்தந்தச் 
சிவலோகன் களிறூர்ந்துன் றிருக்கணெதிர் காட்சிதர 
வவனோடு மகிழ்ந்துசென்றா யன்னம்போற் கோமதியே. 30

அன்னியரும் போனார்நா டடைந்ததுதா ஒனரசிந்நா 
இன்னினிய பதமேத்தி யுய்வதுவே யினிவேண்டும் 
பொன்னதிகந்திரட்டியந்தப் பொன்னினையே போற்றியறத் 
தன்னை மறந்திருப்பாருந்தக்காரோ கோமதியே. 31.

சத்தனிட மடங்குமவன் சத்தியெலா நசிவனை
நித்தமனு சரித்ததனை நிரூபித்தா யானாலுஞ் 
சத்தியுயர் வெனச்சத்தன் சத்திசம மெனப்பிதற்று 
மத்தருமிங் குளரானார் மறைகடந்த கோமதியே

தீரமின்றித் திரமின்றிச் சிவபக்தி தனித்தின்றிச் 
சாரமின்றி வரம்பின்றிச் சாத்திரவா தாரமின்றிப் 
பாரமின்றிச்சைவத்தைப் பாலிப்பார் போற்சிலவ 
ரோரமொன்றிக் குழறுபடை யுரைக்கின்றார் கோமதியே 33

நான்முகத்தன் றிருநெடுமா னல்லரனே யிந்திரனே 
வான்முகத்துப் பிறருமென்றும் வந்துனடி பணிகின்றார் 
நான் மிகுத்து னண்மலர்த்தா ணம்பாமே தம்முயிரை 
யூன்புகுத்தச் சாவாரிவ் வுலகுள்ளோர் கோமதியே. 34

அறம்பாவ மென்னுமிரண் டருங்கயிற்றா லிழுப்புண்டு 
புறம்போனே னுன்னடியைப் போற்றாமலிதுகாறுந் 
திறம்பாத பத்தியுமுன் றிருநோக்காற் கிடைப்பதன்றே 
பறம்பாமென் மனங்குழையப் பாராயோ கோமதியே. 35.

உன்னாணைக் கடங்குகிலே னுன்புகழே பேசுகின்றே 
னென்னமோ பயனதற்கென் றிரந்தேனு னறக்கருணைக் 
கன்னாய் நீ நட்டமர மாலமர மானாலு 
மின்னாத தென்றதனை யீர்குவையோ கோமதியே 36

இருவிசும்பா ரசுரரைவென் றிருமாந்த போதவரை 
யொருதுரும்பாலோரியக்க சொடுக்கவவன் யாரென்று 
வெருவியவ ருனைவினவ விளங்கரனே யெனவிடுத்தாய் 
பெருகொளியே யிமவான்றன் பெருமகளாங் கோமதியே. 37.

மூவரையு முதிப்பித்தாய் மூவரைமுக் குணத்துறுத்தாய 
மூவரையும் மதிட்டித்தாய் மூவரையும் மதிகரித்தாய் 
மூவரையும் நியமித்தாய் முத்தொழிலிலென்றென்று 
மூவரையுந் தாட்படுத்தாய் முக்கணன்பாற் கோமதியே.. 38.

பட்டாலே பலனென்னும் பழமொழியைப் போன்றதுவே 
பட்டாலும் பலன் சிறிது மில்லையெனும் பழமொழியும் 
பட்டாலும் படவில்லை யானாலும் படரின்பம் 
பட்டாரின் பழவினையின் பயனன்றோ கோமதியே. 39.

குடுமியினைக் கத்தரித்துக் குஞ்சியிலா ராய்த்தயிலந் 
தடவிவகுப்பெடுத்துப்பெண் டகச்சீப்பான் மயிர்சுருட்டி 
யிடபமெனத் திரிவதன்றி யினமலரிட் டேத்தாரு 
னடிசிலவ ரவர்வாழ்ந்திங் காம்பயனென் கோமதியே. 40.

வானத்திற் பறந்தாலென் மண்மீது விரைந்தாலென் 
வானத்து வின்மனித்த வாழ்வெனுமெய் யுணர்ந்தார்க்கு 
ஞானத்து னாண்மலர்த்தாணன்கேத்தித் தொழுவதுவே 
தேனொத்துத் தினந்தோறுந் தித்திக்குங் கோமதியே. 41.

உண்ணுவது முழைப்பதற்கே யுழைப்பதுவு முண்பதற்கென் 
றெண்ணிவசி மகன்விலங்கி னெவ்வகையிற் சிறந்திட்டா 
னுண்ணலுழைப் பிவற்றினுமுனுபயபத சேவையே 
மண்ணிலுயர் வென்றவன்றான் மதிப்பதென்றோ கோமதியே 42

தன்னியலை யாயாதுன் றனியருட்சீர் கேட்டலுமே 
யின்னுமவ ளருளாமை யென்னெனக்கென் றச்சீரிற் 
முன்னதவ நம்பிக்கை சாற்றுபவன் மகனேயோ 
மன்னுமுயி ரனைத்தினுக்கும் வாழ்வருளுங் கோமதியே 43.

ஈங்குறங்கி யாங்குறங்கா ரெய்திடுவ ரின்பமெலா 
மீங்குறங்கா தாங்குறங்கி னெய்திடுவர் துன்பமெலா 
மீங்குறங்கி யாங்குறங்கா விதநீயே யெவ்வுயிர்க்கும் 
யாங்குமுறங் காமலிருந்தீயவலாய் கோமதியே. 44.

நன்றுதரு புதுமையென நானிலத்திலொன்றுண்டோ 
வின்றியமை யாததென விரங்கியநீயன்றன்றிங் 
கொன்றிவரு மனிதருக்கொவ் வொன்றுதவ லோராம  
நின்றுபுதுமைப்பித்தனேமாந்தான் கோமதியே. 45

துன்புதவுந் தீயவினை சுகமுதவு நல்லவினை 
யென்பதுவே நியதிசில ரீனாவினை செய்துங்க 
ரின்பதனைக் கண்டுமதி யிழந்துமறஞ் செயமுந்து 
மன்பதையு மையையோ வாழ்வதுண்டோ கோமதியே 46

மாதாமாண் கற்பிகழு மடமகன்போ லெவ்வுயிர்க்கு 
மாதாநீயென்பதனை மதியாரு முன்னைய 
வாதோதித் தம்மூத்தை வாய்நாற்றங் காட்டுகிறார் 
கோதேதோ வவருடல்வந்திடுகுலத்திற் கோமதியே. 47

கருக்குவது மவிப்பதுவுங் காய்ச்சுவதும் வறுப்பதுவும் 
மெரிக்குளவெஞ் சூடொன்றே யிப்பெயர்கள் பெறுமாபோற் 
றிருக்கிளருமொருநியே செகசீவர்க் கருண்முறையி 
லிருக்குனையும் பலபெயராலினிதேத்துங் கோமதியே. 48.

ஆண்டவனைக் கண்முன்காட் டவனையான் தொழுவேனென் 
மீண்டொருவன் பிதற்றுகிறா னென்புதிர நரம்பாதி 
மீண்டுடலி லவன்றன்னை யீதென்று காட்டுவனேல் 
மாண்டவவன் றன்னையும்யான் மதித்திடுவேன் கோமதியே. 49

விரிந்ததிரி மலப்பிடிப்பை வெலமாட்டாதிங்கே நான்
தெரிந்து மிழி வினைபலவே செய்கின்றேனதனாலே 
பரிந்துபுரந்திடுவாயோ பராமுகமா யிருப்பாயோ
வெரிந்துவரு நமனார்முன் யாதுசெய்வேன் கோமதியே. 50

மஞ்சளொடு மங்கிலியம் வாழ்வரசிக் கடையாள 
மஞ்சலிலு னடியாருக் கடையாளந்திருநீறு 
விஞ்சுபுக ழக்கமணி வெறுத்தவற்றை யுரைப்பவர்தந் 
நெஞ்சமதிலமங்கலமே நிலைகொள்ளுங் கோமதியே 51

பிறப்பதுதா னிறப்பதற்கோ பிறந்திடவே யிறக்கின்ற 
ரிறப்பதுவும் பிறப்பது நீயிரங்காதார் துயரன்றோ 
பிறப்பதனுக் குறுபயனாம் பிறவாமை யதையவர்தாம் 
னிறப்பதன்முனெய்துவதுனிச்சையன்றோ கோமதியே. 52

எங்கிருந்து வந்தோமிங் கேன் வந்தோ மிறந்தபின. 
ரெங்குறுவ மென்றாயா திழிவிலங்கொத் துண்டுறங்கி
மங்குமதி யுடையரெலா மனம்போன படிதிரிந்துன் 
பொங்கருளுக் கயலாகிப் புதைகின்றார் கோமதியே. 53

வழிவழியூ னுண்ணாத மரபினருட் சிலரஃதுண் 
டழிபவரின் கரவுரையா லதுவேட்டுனருண்மறுத்திங் 
கிழிவுவருந் தங்குலத்துக் கென்றுணரா தூர்சிரிக்கப் 
பழிபுலவுண் டிருணரகிற் பாய்வதெனே கோமதியே. 54

உண்டு கொழுத்திடுவதற்கே யுடலெடுத்த பெரியார்கைக் 
கொண்டுசெயுஞ் சற்கருமங் குவலயத்திலேதுமிலை 
யொண்டவநல் லுபவாசத் துடலொறுத்துனருள்சேர்ந்த 
தொண்டினரே யதுசெய்யுந்துப்புடையார் கோமதியே. 55

உன்னருளின் துணைகொண்டிங் குயர்மறையினிதயத்து 
ளென்னுளதென் றாய்ந்ததனை யெடுக்குமறி வற்றொருவன் 
றன்னறிவினிறுமாந்து தலைசுழன்றச் சாத்திரத்துட் 
பின்னமுறு பொருள்புகுத்தல் பெட்பாமோ கோமதியே.56

பேரறிஞர் பலர்தந்தார் பெருநூல்கள் பலவவற்றாற் 
சீரடையுஞ்சிலர்நிற்கத் திருந்தாத பெரும்பாலார் 
காரணவு தம்மறிவைக் கலகலநூல் மலிந்திழுக்கத் 
தூரநெறி போனாருன் றுணையடிக்குக் கோமதியே .57

வேதமுன துரையென்னார் வீழ்வது பொய் யுன்றாளி 
லேதுபய னிவற்றுடனுனியல்விளக்க வந்ததெனப் 
போதநிறை புண்ணியரப் பொன்னுரையைக் கொண்டுனது 
பாதமுளத் திருத்தியுறு பயன்பெறுவார் கோமதியே. 58.

மனமதெனைக் கருவீழ்த்த மகனானே னெஞ்சி நின்ற 
வினைநுகர யானீட்டு வினைபலவாம் வானோருக் 
கினியமுது வரநினைந்தே பிறப்பொழித்தான் பத்தினியே 
யெனையதுபோல் வினைநீக்கி யேன்று கொள்வாய் கோமதியே. 59

பலபாவம் புரிந்தாலும் பாறைமன நெகிழ்ந்தொருகா 
னலமாரு முன்னாம நாவார நவின்றிட்டா 
லிலவாகு மத்தனையு மெத்தனைதீட் டேனுமவை
நிலமீதி லொருமுழுக்கானீங்காவோ கோமதியே. 60


இருக்கையிலே மன்மதனா ரென்னுளத்தைக் கலக்கிடுவார் 
மரிக்கையிலே யெனைநமனார் வந்துகொடு போய்வதைப்பா 
ரிருக்கையிலு மரித்தபினு யித்துயரை யெனக்கின்றிப் 
பிரிக்கைசெயும் படைதானுன் பேரருளாங் கோமதிய .61

இன்னிசையு நாட்டியமு மின்றுவளர்ந்திட்டாலும் 
மன்னரை யுன்னருளின் வழிநிறுத்தாதிர்காமப் 
புன்னசையிற் புரட்டலினாற் புன்விலங்கே யவரானா 
ரென்னபயனவைவேறிங் கீந்தனவோ கோமதியே. 62

சாத்திரத்தை யவமதித்துச் சரித்திரத்தை நம்பி நின்ற 
மாத்திரத்தே சிலசைவர் மதிவழங்கு பொருள்கோளிற் 
சாத்திரத்தை யனுசரித்த சரித்திரமே பொருளென்னு 
நேத்திரத்தை இழந்துனருணீங்கிநின்றார் கோமதியே. 63

சாதியெலா மொழிகசனர் சமமென்னும் பகுத்தறிஞர் 
வேதனையா முறையெல்லாம் விளிகவென்பார் மானமின்றி 
யாதிமகனிடத்தில்லை யாக்கினவ னிடையனென்ற 
வேதுவையவ் விரண்டற்கு மெடுத்துரைத்துக் கோமதியே. 64

கடவுளையே நிந்திக்கக் கயவருக்குப் பணங்கொடுத்துக் 
கடவுளையுங் கோயிலிற்போய்க் கைத்தொழுவர் சிலகப்டர் 
மடமலியக் கப்டரையுன் வன்கருணை மறத்தான் 
யடவருநா ளென்செய்வா ரவரந்தோ கோமதியே. 65

பாசத்துக் கயலான பத்தியுளார் சித்தியுளார்
 நேசித்த மாமுனிவர் நீளின்ப முத்தியுளார் 
வாசித்துன் புகழ்பரப்பு மகநீயர் துறவுடையார் 
தேசத்துக் கென்றுமுள செல்வமிவர் கோமதியே 66

ஆராய்ச்சி யனுபூதி யெனுமவற்று ளனுபூதிக் 
காராய்ச்சி யேதுவென்ப ரனுபூதி யில்லானு 
மாராய்ச்சி செய்தாலு னருளினொரு பான்மையவ 
னாராய்ச்சிக் கண்ணுக்கு மருவிருந்தாங் கோமதியே 67

சதுமறையா கமந்தெளிந்து சைவநெறி கடைப்பிடித்து 
மதியரவ வேணியரன் வாமத்தா யுன்றாளை 
யெதுவரினு மறவாமலினிவருமென் குலத்தோரு அத 
மதிவலிபெற்றுய்ந்தேத்த வரந்தருவாய் கோமதியே 68

வேற்றுமத தூடணையை விடுவதன்றி யம்மதத்தைப் 
போற்றுவதென் சைவனவன் புகழ்ந்துரைக்க வேண்டுவது 
னீற்றுநெறி யொன்றேயந் நெறிக்கற்பைத் துறந்தபினு 
மேற்றமவ னெய்துதற்கோ ரேதுவுண்டோ கோமதியே 69

ஏறுமிட மிறங்குமிட மெவ்வெவர்க்கும் வெவ்வேறான 
மேறினவ ரிறங்களவு மெவ்வூர்திப் பயணத்து 
மாறிலராய் மனமொத்து வதிந்திடுதல் போன்றதுவே 
கூறுலகி லெவ்வுயிரின் குடியிருப்புங் கோமதியே 70

சைவத்திற் சிலர் பிறந்தச் சமயநிந்தை புகல்வதுபோல் 
பொய்வைத்த சமயிகளும் புகலாரச் சிலருன்றன் 
மெய்வைத்த வருட்கயலாய் வெங்கலிவாய்ப் பட்டந்தச் 
சைவத்தைப் பழித்துயிரின் சார்பிழந்தார் கோமதியே 71


இத்தேச மெமக்கேயா மிதிற் பிறந்த வேதுவொன்றாக 
லித்தால் மப்படியே யெவ்வுயிர்க்கு முரித்தாகும் 
மத்தாலெவ் வுயிர்க்குமிந்த வவனியிடத் துரிமையினை 
யெத்தாலும் பறிப்பதற்கிங் கியாமாரே கோமதியே 72

பன்றிமுத லெவ்வுயிர்க்கும் பரமசிவன் பரமபிதா 
பன்றிமுத லெவ்வுயிரும் பார்க்கிலுடன் பிறந்தனவாம் 
பன்றிமுத லெவ்வுயிர்க்கும் பார்முழுக்கப் பொதுவுடைமை
 பன்றிமுத லெவ்வுயிர்க்கும் பரிவுடையாய் கோமதியே 73.

பெற்றவனையறியாத பிள்ளைக்குப் பிறப்புரிமை 
சற்றுமில பெற்றவளாற் சார்வதிலை திரிபுரத்தைச் 
செற்றவனே பெற்றவனிச்வேரையஃதுணர்வார்க்கே 
பொற்றவுல கெல்லாமாம் பொதுவுடைமை கோமதியே. 74

உன்னருளைப் போற்றாருற்றுலகை யனுபவித்தல் 
மன்னுவிலங் கனுபவித்தன் மானுமுளத் தவ்வருளை 
யுன்னுபவர்க் கென்றேயிவ் வுலகுன்னாற் றரப்பட்ட 
தன்னதையீங் கறிவதன்றோ வறிவாகுங் கோமதியே. 75

பொருளியலை யறிந்துள்ளம் புனிதமுற்று னருள்பெறவே
 பொருளுடைய ரில்லார்க்குப் பொருளீக வஃதன்றி 
யருளுளமே கொண்டவரை யாதரிக்கத் தாமுளராப் 
பொருளுடையர் செருக்குவதிற் பொருளுண்டோ கோமதியே. 76

எப்பொருளுக் குள்ளேயு மீசுரனைக் காணென்ப 
ரப்படியே காண்பானுக் ககமுனைத்துத் தோன்றிடுமோ 
வப்பொருளும் புலனாமோ வக்காட்சிக் காம்பயனைச் 
செப்புவரோ வுன்னருளிற்றிளையாதோர் கோமதியே. 77

பொதுவென்றுஞ்சிறப்பென்றும் புகலுமிரண் டொழுக்கமுமே 
மதுவொன்றுன் மலர்த்தாளை வழிபடுவார்க் கவசியமா 
மதுவொன்றே மிதுவொன்றே யமையுமென வொழுகிடுவார் 
விதியொன்று மறியாமல் வீண்போவார் கோமதியே. 78

கடவுளையிம் மனிதன்றான் கற்பனைசெய் தானென்று 
மடவருரைத் திடுவரந்த மனிதனெவ னெனவினவிற் நடவுவரால் 
விடையினையச் சார்வாகர் குழாம் பெருகி 
யிடவுலகைக் கவர்ந்திட்டாலேதமன்றோ கோமதியே. 79

யானைகண்ட குருடரென விருப்பனபுன் மதங்களெல்லாம்
 யானைகண்ட விழியனென விலங்குவதுன் சைவமொன்றே 
யானைகண்ட விழியனுண்மை யெடுத்துரைத்தா லவனைவைது 
யானைகண்ட குருடரெலா மெள்ளாரோ கோமதியே. 80

உவமானப் போலிகளை யுரைத்தழிந்து சைவத்துக் 
கவமாவச் சமயிகளை யயலாக்கிக் கெடுக்கின்றார் 
சிவஞான போதாதி திராவிடமா பாடியமிங் 
கவராயாதிருந்தானன் றறிகுவரோ கோமதியே. 81

பரசமய நிராகரணம் பண்ணாமற் சைவத்தைத்
திரமுறவிங் கெவர்தெளிவார் சீர்தூக்கு முறையாலே 
பரசமய நிராகரிப்பும் பண்ணிடுக பகையாலச் 
சிரமவினை புரிந்தாலே தீதென்றாய் கோமதியே. 82

என்றென்று மெங்கெங்கு மெனதெந்தச் செய்கையிலு 
நன்றொன்று னாண்மலர்த்தா ணான்மறவா திருத்தற்கான 
தொன்றொன்று புவிமீதிற் சுபுத்தியொன்று நல்குவையே 
குன்றொன்று குணமுடையார் குளிர்ந்தேத்துங் கோமதியே. 83

முப்பொருளினியல்பறிந்தம் முப்பொருளின் சம்பந்த
 மிப்படியென் றளவைகளா லிருக்குவழி யாய்ந்துணர்ந்து 
செப்பமிகுந்தவரேயுன் றிருவருளிற் றம்மையிழந் 
தொப்பரிய கதிசேர்ந்தங் கோய்ந்திருப்பார் கோமதியே. 84

சிலரறிவன் பாதியவே தெய்வமென்பா ரவைகுணமே
 நலமுறுமக் குணியெதுவோ நல்லிறையா புல்லுயிரா 
வுலகவரை யேமாற்றி யொவ்வாத கோளுரைத்தா 
லலகையவரென்பதிலோ ரையமுண்டோ கோமதியே. 85

பிரமமெனும் பொருளொன்றே பெயர்தானே பலவென்னிற் 
பரமசிவ னெனும் பெயர்க்குப் பரந்தாமன் பொருளாமோ
 சரளமுறு நிகண்டருத்தந் தருகோசம் பயனிலவோ 
புரமெரியச் சிரித்தவனைப் போற்றிமகிழ் கோமதியே. 86

சீராசை வரராசைதிகழ்புன்னை கூழையெனும் 
பேராரிந் நகரத்துன் பெருங்கோயில் புகுந்துசுனை 
நீராடி நீறணிந்துன் சன்னிதியினின்றன்பு 
பேராமல் வணங்காரும் பிறந்தாரோ கோமதியே. 87

நரருக்கு நாட்டுக்கு நாஞ்செய்யு நற்பணியே 
பரனுக்காம் பணியென்பர் பாரரசின் கொடியேற்றி 
வரவேற்றிங் கரசினரை வழிபடலே னவ்வணக்கம் 
பரனுக்குஞ் செய்வதன்றோ பகுத்தறிவாங் கோமதியே. 88

பொல்லாரை வெறுத்திடற்க பொல்லாங்கை வெறுத்திடென்றா 
னல்லாரை விரும்பற்க நலத்தினையே விரும்பென்றாம் 
நல்லாரைப் பொல்லாரை நலந்தீங்குக் கயலென்றா 
னல்லாரை மதியாத நவைவருமே கோமதியே. 89

தனிமனிதன் விடயமென்பர் சமயத்தை யதுசெல்லா 
தினமிலதேற்சிவசமயத் திருக்கோயில் பூசைவிழா 
தினவிரத மாசாரந் திருமறைநூ றிரவியங்க 
ளினிவருசந்ததியாதி யிருந்திடுமோ கோமதியே. 90


கண்ணாடி யணிந்தாலுங் காண்பாரோ வந்தகரே 
மண்ணாடும் வாழ்விலக மகிழ்மாந்தர்க் கருமறைக
 டண்ணாருனருட்சிறப்பைத் தடுமாற்றான் விரித்தாலும் 
முண்ணாடி யவர்தெளியா துழலாரோ கோமதியே. 91

விழிகாணும் பொருள்களெலா மேதினியி லழிவனவே 
வழிவேயாப் பொருளெவன்கட் ககப்பட்ட தின்றுவரை 
பழிதீருன் றிருவடியைப் பார்ப்பதற்குனருளொன்றே 
விழியாகு மென்பதன்றோ மெய்யாகுங் கோமதியே. 92

பெற்றவரும் பெறவில்லை பிறந்தவரும் பிறக்கவில்லை 
பெற்றவரைப் பெறுவித்தாய் பிறந்தவரைப் பிறப்பித்தாய் 
சிற்றுயிருக் கிதஞ்செயுமத் திருவிளையாட் டற்புதமே
பற்றறவுன் பதமடியேன் பற்றவருள் கோமதியே. 93


மண்ணுலகிற் பெற்றவரான் மனைவியராற் புத்திரராற் 
கண்ணெனுநற் கல்வியினாற்கனதனத்தாற் பதவியினா 
னண்ணுசுக முன்னடிக்கீழ் நண்ணியிறு மாந்தவர்க்குத் 
தண்ணிலவிற் றருவினிழறருசுகமாங் கோமதியே. 94

நிலையாமை தெரியாதார் நீணிலத்தி லெவருமில 
ரலையாமை யுளத்திருத்தி யன்புமுன்பாற் செய்யகிலார் 
நிலையாமை தனைநினைந்து நெஞ்சமுன தடியினிலை 
குலையாமை கூடும்வகை குறியாரோ கோமதியே. 95

விதிநியம மெமக்காம்யாம் விளம்பதற்காவிலமெனநீ 
யுதவதனை மாற்றுசிலருலகிலெதற்கிருக்கின்றா 
ரதனையவ ரியம்புகவு னருள் பெறவென் றனரேலவ்
விதிநியம மாற்றமவர் வேண்டுவரோ கோமதியே. 96

ஒழுக்கத்துக் குறுபயனிவ் வுலகசுக மெனின் மிருக 
மொழுக்கமின்றி நுகர்ந்திலதோ வுலகசுக நீவகுத்த 
வொழுக்கத்துக் குறுபயனா முயர்ந்தவுல கதனைமறுத் 
தொழுக்கத்தைப் புகழ்பவர்பா லொழுக்கமுண்டோ கோமதியே. 97 

பொருட்செறிவுஞ்சொற்சுவையும் பொருந்தாமலிருந்தாலும் 
மருட்செறிவை நீக்கியின்ப மன்னுயிர்கட் கீயுமுன 
தருட்செறிவை யேத்திலவோ வடியேன்செய் பாக்களெலா
மிருட்செறிவோ டியான்மணமா ரெழிற்கூந்தற் கோமதியே. 98

தொழவேண்டு முனையென்றுந் தூமலர் தூஉய்ப் பாடியுன்மு 
னழவேண்டு முன்னடியி லடியற்ற மரமேபோல் 
விழவேண்டு மிவைசெய்துன் விளங்கருளிற் றிளைத்தாடி 
யெழவேண்டு மென்பதுவே யெனக்காசை கோமதியே. 99

தனமுயரக் கலைவளரச் சதாசார மிகநட்புக் 
கனியமழை பொழியவளங் கவியசிவ சற்சமயம்
நனிபரவச் சீராசை நலம்பெறுகச் சங்கரனார்க்
கன்னியசிற் சத்தீநீயருள்புரிக கோமதியே.100

திருச்சிற்றம்பலம்
கோமதி சதரத்ந மாலை முற்றிற்று.
ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க

No comments:

Post a Comment