Tuesday, 23 May 2023

அருட்பிரகாசரின் அற்புதங்கள்

 

வள்ளற்பெருமானின் திருநெறிகள்

1. கடவுள் ஒருவரே.

2. அவர் அருட்பெருஜோதியர்

3. சிறுதெய்வ வழி'பாடு கூடாது.

4. சிறு தெய்வத்தின் பெயரால் பலியிடக் கூடாது

5. புலால் உண்ணக் கூடாது.

6. எந்த உயிரையும் கொல்லக் கூடாது.

7. சாதி, சமய, மத, இன பேதம் பார்க்கக்கூடாது.

8. எல்லாரையும் நம் சகோதரர்களாகக்கருதுதல் வேண்டும்.

9. எல்லா உயிரையும் தம் உயிர் போல் எண்ணல் வேண்டும்.

10. ஏழைகளின் பசியைப் போக்குவதையே இறைவழிபாடாகக் கொள்ளல் வேண்டும்.

 

அருட்பிரகாசரின் அற்புதங்கள்

வள்ளலார் இளைஞர் மன்றம்

46 அ. கோட்டைக்கரை. வடலூர்

மார்கழி 5. பூசத் திருநாள்  20-12-2013

 

அருட்பிரகாசரின் அற்புதங்கள்

தொகுப்பு இராம.பாண்டுரங்கன்

மேனாள் கல்வித்துறை இணை இயக்குநர்,

மதுரை.

 

 

திருஅருட்பா

அற்புதம் அற்புதமே

அற்புதம் அற்புதமே-அருள் அற்புதம் அற்புதமே

சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது

சித்தாடுகின்ற திருநாள் பிறந்தது

கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது

கற்ற பொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது

(அற்புதம்)

 

செத்தார் எழுகின்ற திருநாள் அருத்தது

சிவநெறி ஒன்றே எங்கும் தலை எடுத்தது

இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது

இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது

(அற்புதம்)

 

 

 

 

சின்னம்பிடி

அம்பலவர் வந்தார் என்று சின்னம்பிடி

அற்புதம் செய்கின்றார் என்று சின்னம்பிடி

செம்பலன் அளித்தார் என்று சின்னம்பிடி

சித்தி நிலை பெற்றதென்று சின்னம்பிடி (அம்)

 

சிற்சபையைக் கண்டோம் என்று சின்னம்பிடி

சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம்பிடி

பொற்சபை புகுந்தோம் என்று சின்னம்பிடி

புந்தி மகிழ்கின்றோம் என்று சின்னம்பிடி (அம்)

 

 

அருட்பிரகாசரின் அற்புதங்கள்

தில்லையில் சிரித்த பிள்ளைச் சிரிப்பு

இராமையா பிள்ளைக்கும், சின்னம்மையாருக்கும் 05.10.1823இல் இராமலிங்க அடிகள் அவதரித்தார்கள். குழந்தை பிறந்த ஐந்தாம் மாதம் இராமையா பிள்ளை குடும்பத்தோடு சிதம்பரம் சென்றார். சிதம்பரம் நடராசப் பெருமானைத் தரிசிப்பதற்காகச் சிற்சபை முன் நின்றார்.

தீபாராதனை நேரம் வந்தவுடன் அனைவரும் ஆனந்த தாண்டவனைக் கண்டு அகம் மகிழ்ந்தனர். ஆனால் இந்த ஐந்து மாதக் குழந்தைக்கு நடராசப் பெருமானின் உண்மைத் திருவுருவம் தென்படவில்லை. மாறாக ஞானாகாயம் - சிதாகாயம் - வெட்டவெளி அறிவு மன்றம் என்று கூறும் சிதம்பர ரகசியம் தெரிந்தது. உடனே அக்குழந்தை கலகலவென்று சிரித்தது.

ஆராதனை செய்து கொண்டிருந்த அப்பைய தீட்சிதர் அருகில் வந்தார். சிரித்த குழந்தையைப் பார்த்தார்; வியந்தார். இராமையாவிடம் "அய்யா! இது ஆண்டவன் நடராசப் பெருமானின் அருட்குழந்தை" என்று கூறி அகம் மகிழ்ந்தார்.

 

இறைவன் அளித்த இரவு உணவு

வள்ளற்பெருமான் சென்னையில் இருக்கும்போது ஒவ்வொரு நாளும் திருவொற்றியூர் சென்று வழிபட்டு வருவது வழக்கம். ஒருநாள் இரவில் பெருமான் இக்கோவில் மண்டபத்திலேயே பசியோடு படுத்துக்கொண்டார்கள். இவரின் பசி பொறுக்காத இறைவன் அக்கோவில் பூசகர் வடிவில் வந்து உணவு அளித்துச் சென்றார். மறுநாள் அவரை விசாரிக்கச் சென்றபோது அவர் இரண்டு நாட்களாக ஊரில் இல்லை என்பது தெரியவந்தது. பெருமான்மீது என்னே இரக்கம் இறைவனுக்கு!

 

அம்பிகை அளித்த அற்புத உணவு

பெருமான், ஒருநாள் ஒற்றியூர் வழிபாடு முடித்து நீண்ட நேரம் சென்று வீட்டிற்குத் திரும்பினார்கள். இரக்க மனம் கொண்ட பெருமான், எவரையும் எழுப்ப மனமின்றி வீட்டிற்கு வெளியில் திண்ணையிலேயே படுத்துக் கொண்டார்கள். அடியவரின் பசியைக் காணச் சகியாத வடிவுடையம்பிகை பெருமானை எழுப்பி உணவு தந்து உண்ணச் செய்தாள்.

உலக மக்களின் பசியைப் போக்க நினைத்த பெருமானுக்கு, ஒற்றியூர் அம்பாள் பசியைப் போக்கினாள்.

 

ஒற்றியில் வந்த உத்தம மனிதர்

திருவொற்றியூர் தேரடிவீதியில் டோபா சுவாமி என்ற நிர்வாண சந்நியாசி இருந்தார். அவர் அவ்வழியே செல்லும் மக்களைப் பார்த்து நாய் போகிறது, நரி போகிறது, கழுதை போகிறது, மாடு போகிறது' என்று இகழ்ந்து கொண்டிருப்பார். ஒருநாள் பெருமான், வழக்கத்திற்கு மாறாக அவ்வீதி வழியே கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது 'இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார்' என்று கூறி தன் கைகளால் தன் தேகத்தை மறைத்துக் கொண்டு அச்சந்நியாசி அவ்விடம் விட்டு அகன்றார்.

மருதூரில் மனித நிலையில் பிறந்த பெருமான், சித்திவளாகத்தில் கடவுள் நிலை அடைவதற்கு முன் சென்னையில் உத்தம மனிதனாக உயர்ந்து விளங்கினார் என்பது உண்மைதானே.

 

சிறு சிறு மணலும் சிவலிங்கமானது

திருவொற்றியூர் பட்டினத்தார் சமாதியில் தொண்டு புரிந்து வந்தார் ஓர் அம்மையார். வள்ளற் பெருமான் அப்பக்கம் சென்றபோது அவ்வம்மையார் வந்து வணங்கினார். பெருமான் ஒரு பிடி மணலை எடுத்து

அவ்வம்மையார் கையில் கொடுத்து மூடித் திறக்கச் சொன்னார்கள். அப்படியே அவ்வம்மையார் செய்தார்கள். ஆனால் என்ன அதிசயம்! அம்மணல்கள் ஒவ்வொன்றும் சிவலிங்கங்களாகக் காட்சியளித்தன. அது கண்டு ஆனந்தம் கொண்டார் அவ்வம்மையார்.

மணலில் சிவலிங்கம் செய்யலாம். ஆனால் மணலைச் சிவலிங்கமாகச் செய்ய முடியுமோ? பெருமானின் பேரருள் அதனைச் செய்தது.

 

தண்ணீர் விளக்கு எரித்த தன்மை

வள்ளற் பெருமான் கருங்குழி வந்தவுடன் வேங்கடரெட்டியார் வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்போது ஒவ்வொரு நாளும் பெருமான் இரவு முழுவதும் எழுதுவதற்காக அவ்வீட்டு அம்மையார்

முத்தாலம்மை விளக்கு ஏற்றி வைப்பது வழக்கம்.

ஒரு நாள் புதிதாக ஒரு மண் பாத்திரத்தைப் பழக்க அதில் தண்ணீரை ஊற்றி வைத்தார். வழக்கம்போல் எண்ணெய் உள்ள பாத்திரத்தையும் வைத்து வெளியூர் சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது தண்ணீர் இருந்த பாத்திரம் குறைந்திருந்தது. எண்ணெய் இருந்த பாத்திரம் இருந்தபடியே இருந்தது. பெருமான் இரவு முழுவதும்

எண்ணெய் குறைந்தவுடன் தண்ணீரையே ஊற்றி விளக்கு எரித்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து அவ்வம்மையார் வியந்தார்.

 

தட்டிக் காட்டிய தந்தையின் சமாதி

கடலூர் பழைய நகர் தேவநாயகம் பிள்ளையின் தந்தை ஒரு யோகி. அவர் மறையும் சமயத்தில் "யார் முக்காடிட்டுக் கையில் பிரம்பு வைத்துக் கொண்டு இதுதானா உன் தகப்பனார் சமாதி? எனத் தட்டிக்காட்டிக் கேட்பாரோ அவரையே நீ குருவாகக் கொள்" என்று தம்மகனுக்குக் கட்டளையிட்டிருந்தார்.

பெருமான் அவ்வூருக்கு வந்தபோது தேவநாயகம் வீட்டிற்குச் சென்று அப்படியே தட்டிக்காட்டினார்கள். உடனே அத்தேவநாயகம் பெருமானையே குருவாகக் கொண்டு மேன்மை பெற்றார்.

 

பெருமான் போக்கிய பேயும் நோயும்

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள ஊர் வேட்டவலம். அங்கு ஜமீன்தாராக இருந்தவர் அப்பாசாமிப் பாண்டாரியார். அவருக்கு இரு மனைவியர். ஒரு மனைவிக்கு 'பிரம்மராட்சசம்' என்ற பேய்; மற்றொரு மனைவிக்கு மகோதரம் என்ற நோய்.

இந்நோயும் பேயும் நீங்க மருத்துவர்களையும் மந்திரவாதிகளையும் அழைத்தார். குணம் பெறவில்லை.

பெருமான் பெருமையறிந்த ஜமீன்தார், அவர்களை வேட்டவலத்திற்கு வரும்படி வேண்டினார். பெருமானும் இசைந்தார்கள்.

பெருமானின் வருகையை உணர்ந்த ஜமீன்தார் ஒரேவிதமான இரு நாற்காலிகளை அமைத்து அவற்றில், தான் நினைத்த நாற்காலியில் உட்காருவாராயின் 'மகான்' என நிச்சயிக்கலாம் என்று எண்ணினார்.

வள்ளற்பெருமான் வீட்டினுள் நுழைந்த போதே பிரம்மராட்சசி பிடித்த மனைவி வந்து வணங்கினார். 'உத்தரவு கொடுங்கள் போய் விடுகிறேன்' என்று கூறி திருநீறு பெற்றார், பேய் ஓடியது.

வள்ளலார் உள்ளே சென்று ஜமீன்தார் எண்ணிய நாற்காலியிலேயே அமர்ந்தார். ஜமீன்தார், 'மகான்' என உணர்ந்து மிகவும் மகிழ்ந்தார். மகோதர நோய் கொண்ட மனைவிக்குத் திருநீறு தந்து குணமாக்கினார்கள். அன்றே ஜமீன்தார் பெருமானின் அன்பரானார். அத்துடன் அவர் ஜமீனில் உயிர்ப் பலியை நீக்க உத்தரவிட்டார்.

 

அள்ளக் குறையாமல் வள்ளல் கொடுத்தது

தருமச்சாலையில் ஒருநாள் இரவு உணவு உண்ணும் நேரத்தில் திடீரென நூறுபேர் வந்தனர். வேலூர் சண்முகம் என்பவர் பெருமானை அணுகி "உணவு குறைவாக உள்ளது; பத்து பேருக்கே இருக்கும்" என அறிவித்தார். உடனே பெருமான் 'பிச்! இலை போடும்' என்று கூறி தமது அருட்கரத்தாலேயே எல்லோருக்கும் பரிமாறினார்கள். நூறு பேரும் சாப்பிட்ட பிறகும் பத்துபேர் உணவு குறையாமல் அப்படியே இருந்தது.

எடுக்க எடுக்கக் குறையாத அட்சய பாத்திரம் பற்றி படித்திருக்கிறோம். ஆனால் கொடுக்கக் கொடுக்கக் குறையாத அட்சய கரத்தைப் பார்த்திருக்கிறோமா! அத்தகைய அட்சய திருக்கரம் பெருமானின் திருக்கரம்.

 

திரையில் காட்டிய சிதம்பர தரிசனம்

ஒருமுறை சிதம்பரம் ஆனித் திருமஞ்சன விழாவிற்குப் பெருமானுடன் செல்ல விரும்பிய அன்பர்கள் பலர் வடலூரில் தங்கினர். ஆனால் தரிசன நாள் நெருங்கியும் பெருமான் புறப்படவில்லை. அதனால் ஒவ்வொருவராகச் சிதம்பரம் சென்றனர்.

கடைசி வரை காத்திருந்த சிலர் சிதம்பர தரிசனம் தவறியதே என்று மனம் வருந்தினர். அவர்களது பேரவாவை நிறைவேற்றும் பொருட்டு நமது பெருமான் சத்திய தருமச்சாலை நடுவில் திரைபோடச் செய்தார்கள். அங்குச் சிதம்பர தரிசனத்தைப் பாருங்கள் என்றார்கள். அவ்வாறே அவ்வன்பர்கள் சிதம்பர தரிசனத்தைக் கண்குளிரக் கண்டுகளித்தனர்.

தற்போதைய நேரடி ஒளிபரப்பை அப்போதே நிகழ்த்திக்காட்டிய அறிவியல் ஞானி வள்ளற்பெருமான்.

 

பிள்ளை பிழைத்தலும் பிரசங்கம் செய்தலும்

கடலூர் தேவநாயகம் என்பவரின் ஒரே மகன் ஐயாசாமி. அவர் நோய்வாய்ப்பட்டு உயிர் நீங்கும் தருவாயில் இருந்தார். தேவநாயகம், பெருமானை நினைத்துப் பிரார்த்தித்தார்.

அப்போது வடலூரில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த வள்ளற்பெருமான், அதேசமயம் அங்குச் சென்றார்கள், கதவைத் தட்டி திருநீறு அளித்து கண் விழிக்கச் செய்து குழந்தையைக் காப்பாற்றினார்கள். இவ்வாறு வடலூரிலும், கடலூரிலுமாக பெருமான் ஒரே நேரத்தில் அருளற்புதம் நிகழ்த்தினார்கள்.

 

வழியைக் காட்டிய வள்ளற் பெருமான்

விருத்தாசலம் வழக்கறிஞர் வெங்கடேசன் என்பவர் வாரந்தோறும் பெருமானைக் காண இரவு நேரத்தில் வடலூர் வருவது வழக்கம். அப்படி வரும்போதெல்லாம் இடையில் உள்ள காட்டுப் பகுதியில் ஆள் உருவம் தோன்றாத இரண்டு தீவட்டிகள் மட்டும் அதிக வெளிச்சத்தோடு வழிகாட்டிச் செல்லும். இது பெருமானின் அருளாற்றலே எனக் கண்ட அவர் வாழ்நாள் முழுவதும் வடலூரிலேயே வாழ்ந்து வந்தார்.

 

அதிகையில் காட்டிய அற்புதக் காட்சி

ஒருமுறை வள்ளற் பெருமான் பண்ருட்டிக்குப் பக்கமுள்ள திருவதிகை வீரட்டானத்திற்குச் சென்றார்கள். அப்போது பெருமானைக் காண பெரியதோர் கூட்டமே கூடிவிட்டது. அன்பர்கள் கூட்டம் அதிகமானது கண்ட பெருமான் மூன்று நான்கு இடங்களில் தம் திருவுருவத்தைத் தோன்றும்படிக் காட்டி அருள்புரிந்தார்கள்.

 

பெருமான் பெய்வித்த பேரருள் மழை

ஓர் ஆண்டில் சித்திரை மாதத்தில் வெயிலின் கொடுமை தாங்கவில்லை. மழையில்லாமல் பயிர்கள் வாடின. தருமச்சாலைக்கு வந்த பலரும் தவித்தனர். இதையறிந்த பெருமான் ஒரு சொம்பு தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். தண்ணீர் வந்ததும் தம் காலில் விடச் செய்தார்கள். சிறிது நேரத்திற்குள் நான்கு மரக்கால் மழை பெய்தது.

இது தெரிந்த குறிஞ்சிப்பாடிக்குப் பக்கமுள்ள புதுப்பேட்டை ஊரினர் பெருமானிடம் வந்தனர். தம் ஊரிலிருக்கும் இரு கிணறுகளிலும் நீர்வற்றிப் போய், குடிநீர் இன்றி மக்கள் வாடுவதைக் கூறினர்.

பெருமான் அவ்வூருக்குச் சென்றார்கள். ஆறு குடம் தண்ணீர் எடுத்துத் தம் தலையில் ஊற்றச் செய்தார்கள். உடனே பெருமழை பொழிந்தது. கிணறுகளில் ஊற்றுப் பெருக்கெடுத்தது. சுவையுள்ளதாகவும், மேல் நீராகவும் நீர் பெருகியது. இன்றளவும் அவ்வூரில் அவ்வாறே இருந்து வருகிறது.

 

ஆடையை வீசி நெருப்பை அணைத்தது

குறிஞ்சிப்பாடிக்குப் பக்கத்தில் உள்ள புதுப்பேட்டைக்குப் பெருமான் மற்றொருமுறை சென்றிருந்தார்கள். அப்போது பெருமான் தங்கியிருந்த இரத்தினம் அம்மாள் வீட்டிற்கு எதிர் வீட்டில் நெருப்புப் பிடித்துக் கொண்டு எரிந்தது. உடனே பெருமான் தமது வேட்டியால், இருந்த இடத்திலிருந்தே விசிறி நெருப்பை அணைத்தார்கள். உடனே நெருப்பு அடங்கிவிட்டது.

வள்ளற்பெருமான் திருவருளின் முன் தீயும் தணியும்தானே!

 

கள்வரைத் திருத்திய வள்ளற் பெருந்தகை

ஒரு முறை மஞ்சக்குப்பம் இராமச்சந்திர முதலியார் என்பவர் வடலூருக்கு வந்து பெருமானைத் தம் ஊருக்கு வர வேண்டினார். இருவரும் இரவில் வண்டியில் புறப்பட்டனர். வண்டி குள்ளஞ்சாவடி அருகே வரும்போது இரு திருடர்கள் வண்டியை நிறுத்தச் சொன்னார்கள். வண்டிக்காரனும் சேவகனும் பயந்து முந்திரித் தோப்பில் மறைந்தனர். திருடர்கள் வண்டியின் பின்புறம் வந்து முதலியார் கையிலுள்ள வைர மோதிரத்தைக் கழற்றும்படி அதட்டினர்.

பெருமான் அவர்களை நோக்கி "அவசரமோ" என்றார்கள். உடனே திருடர்கள் தடியாலடிக்கத் தடியை மேலே தூக்கினர். உடனே கைகள் அசைவற்றுப் போயின; கண்களும் மறைந்தன. திருடர்கள் வருந்தி மன்னிப்புக் கோரினர். பெருமான் அவர்களை மன்னித்தார்கள். கண்கள் மீண்டும் பார்வை பெற்றன. கைகள் செயல்பட்டன. திருடர்கள் திருந்திச் சென்றனர்.

கள்வர்க்கும் கருணை காட்டிய பேருள்ளம் பெருமானின் திருவுள்ளம்.

 

மழையில் நனையா மகானின் தேகம்

ஒருநாள் மாலை நேரத்தில் பெருமழை பெய்தது. அங்குப் பெருமான் உள்ளிட்ட அனைவரும் கூடியிருந்தார்கள். மழையால் அங்குக்கூடியிருந்த அனைவரும் நனைந்தார்கள். அவர்களின் ஆடைகளும் முழுவதும் நனைந்தன. ஆனால் வள்ளற் பெருமான் மீது ஒரு துளியும் மழைநீர் படவில்லை. ஆடைகளும் நனையவில்லை. இதைப் பார்த்த அனைவரும் அதிசயித்தனர்.

 

மண்துகளெல்லாம் பொன்துகளானது

ஆலப்பாக்கம் என்ற ஊரில் இருந்த அன்பர் நயினா ரெட்டியார். அவர் வேண்டுகோளுக்கிணங்க அவர் வீட்டிற்குப் பெருமான் சென்றார்கள். அவருக்குப் பொன் செய்வதில் ஆசையிருப்பதை அறிந்தார்கள். உடனே ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டுவரச் செய்தார்கள். அதில் ஒருபிடி மணலைப் போட்டார்கள்.

சிறிது நேரம் கையால் மூடித் திறந்தார்கள். டம்ளரில் இருந்த மணலை எடுத்து வாசலில் எறிந்தார்கள். அம்மணல் துகள்களெல்லாம் பொன் துகள்களாய் விழுந்தன. 'இச்சையற்றவர் மலம் பொன்னாகும்' என்று அறிவித்து அவர் இச்சையை மாற்றினார். அன்பரும் பெருமான் சொற்படி ஒழுகினார்.

தன்னையே பொன்னாக மாற்றிக்கொண்ட பெருமானுக்கு மண்ணையா பொன்னாக மாற்ற முடியாது. அவரின் அருள் வல்லபம், எதுவும் செய்யும்.

 

அடியவர் சுரங்களை நொடியில் தீர்த்தது

ஒருநாள் சித்திரை மாதத்து வெப்பத்தால் தருமச்சாலையிலுள்ள பதினொரு அன்பர்கள் சுரமடைந்தனர். தயா வடிவினராகிய பெருமான் இதைச் தெரிந்தார்கள். அடியார்களை அணுகி, 'அப்பா! சுரத்தை எனக்குக் கொடுத்து விடுகிறாயா ?" என்று ஒவ்வொருவரையும் தனித்தனியே சென்று கேட்டார்கள். பின்னர் தாம் மட்டும் ஒரு அறையினுள் சென்று ஐந்து நிமிடங்கள் அனல் மயமாகிப் பின் வெளிவந்தனர். உடனே அனைவருக்கும் கரம் நீங்கியது.

தன்னை அடுத்தவர்கள் சுகமாக இருக்க வேண்டும் என்பதில் பெருமானுக்கு இருந்த பெருந்தயவுதான் என்னே!

 

இரண்டு இடங்களில் இருந்த அற்புதம்

ஒருநாள் ஞானசபைக்குக் கொடிமரம் வாங்க காண்ட்ராக்டர் ஆறுமுக முதலியார் சென்னைக்குச் சென்றார். மரவாடிக்குச் சென்ற போது எம்மரம் சாலையின் கொடி மரத்திற்குப் பொருந்துமோ அம்மரத்தின் மீது வள்ளற் பெருமான் உலவிக் கொண்டிருந்ததைக் கண்டார். அம்மரத்தை வாங்கி வடலூருக்கு அனுப்பிவிட்டு, 'நீரும் போம்' என்று ஆறுமுக முதலியாருக்குக் கட்டளையிட்டார்கள் பெருமான். இங்கு வந்தவுடன், சென்னைக்கு வந்திருந்த அதே சமயம் பெருமான் இங்குச் சொற்பொழிவு ஆற்றியிருந்ததை அறிந்த அன்பர்கள் பெருமானின் திருவருள் திறத்தை உணர்ந்து போற்றினர்.

 

அன்றாட தேவைக்கு அரைரூபாய் தந்தது

வடலூரில் அமாவாசை என்ற அன்பர் இருந்தார். அவர் இறந்த மாடுகளை அறுத்தும், அதன்

இறைச்சியைத் தின்றும் வாழ்ந்தார். பெருமான் அவரை அழைத்தார். இன்று முதல் இறந்த மாடுகளைத் தின்னாமல் புதைக்க வேண்டும் என்றார். எனக்கு வேறு வருமானம் இல்லையே என்றார் அமாவாசை. பெருமான் அரை ரூபாய் நாணயத்தை எடுத்தார். மஞ்சள் துணியில் அதை முடிந்துக் கொடுத்தார். இதைத் தினமும் அவிழ்த்துப்பார்; அரை ரூபாய் கிடைக்கும் என்றார். அன்று முதல் அவர் புலால் உணவை நீத்தார். சுத்த சைவ உணவினர் ஆனார். நிரந்தர வைப்பு நிதி தந்து ஓர் ஏழை அடியவரைச் சிறந்த புண்ணியராக்கினார் பெருமான். ஏழைகளிடம் பெருமான் காட்டிய இரக்கம் என்னே! என்னே!

 

சிதறிய நெருப்பால் பதறாதிருந்தது

பெருமான் சித்திவளாகத் திருமாளிகையில் சிவானந்தத் தியானத்தில் திளைக்கும்போது தம் இரு பக்கங்களிலும் பெரிய இரும்புச்சட்டியில் நிலக்கரித் தணல் எரிந்து கொண்டிருப்பது வழக்கம். ஒருநாள் அந்நெருப்புச் சட்டியிலிருந்த நெருப்பு குருக்கள் கால்பட்டு பெருமான் மீதும் அவர் மீதும் சிதறியது. அது கண்ட குருக்கள் பதைத்துத் துடித்தார். ஆனால் சுவாமிகள் திருமேனிக்கோ ஆடைக்கோ ஒன்றும் பாதிப்பு ஏற்படவில்லை.

சுத்த தேகத்திற்குப் பாதகம் மற்ற பூதத்தால் ஏற்படாதுதானே!

 

மீறி நடந்ததால் மீன்வலை அறுந்தது

மேட்டுக் குப்பத்தில் மீனவர் இருவர் வசித்து வந்தனர். அவர்கள் அங்குள்ள ஏரியில் மீன் பிடித்து வந்தார்கள். இது தெரிந்த பெருமான் அவர்களை அழைத்து "இச்சிறு வலையால் பல்லாயிரம் உயிர்கள் அழிகின்றன. பல தொழில் இருக்கும்போது இத்தொழில் வேண்டாம்" என்று அறிவு புகட்டினார்கள்.

அவர்கள் பெருமானுக்குத் தெரியாமல் வேறுவழியே சென்று பெருமான் சொற்களை மீறி வலை வீசினர். அவ்வலை துண்டு துண்டாக அறுந்தது. அதனைத்தைத்து, அடுத்த நாளும் வீசினர். அப்போதும் அவ்வலை அறுந்தது. பின் பெருமான் சொல்லுக்குப் பயந்து அவர்கள் அத்தொழிலையே விட்டுவிட்டனர்.

உயிர்க்கொலை செய்தோர்க்கு உபதேசம் செய்து, அவர்களை உயர்நிலைக்குக் கொண்டுவந்தார் பெருமான்.

 

அருளால் உணர்த்திய ஆறு மொழிகள்

பாண்டிச்சேரி தந்தி அலுவலகத்தில் மேலாளராக இருந்தவர் பிநாகபாணி. அவர் ஆறுமொழிகள் தெரிந்தவர். அகந்தையோடு ஒரு நாள் அவர் பெருமானிடம் வந்தார். அவர் மனநிலையை அறிந்த பெருமான், அருகில் இருந்த திருநாகேஸ்வரன் என்ற நான்கு வயது சிறுவனை அழைத்து, 'தம்பி! உனக்கு எத்தனை மொழிகள் தெரியும் ?" என்று கேட்டார்கள். சிறுவன், 'ஏழு மொழிகள் தெரியும்" என்றான்.

பெருமான் பிநாகபாணியை நோக்கி "ஐயா! நீங்கள் கேட்கவந்தவற்றை எந்த மொழியில் வேண்டுமானாலும் இவனிடம் கேளுங்கள் சொல்வான்" என்றார்கள். வந்த பிநாகபாணி வாய் பேசாது நின்றார். அகந்தை அடங்கி

அருட்பிரகாச வள்ளலை வணங்கிச் சென்றார்.

இறைவனிடம் படித்த பெருமானுக்கு எந்த மொழி தெரியாது, எல்லா மொழியும் தெரியும்தானே!

பொய்யால் பிறந்த புண்ணும் சிரங்கும்

இருபது வயதுள்ள சிறுவன் ஒருவன் உடம்பில் எண்ணெய் தடவி பஞ்சை வைத்துக் கொண்டான். வேண்டுமென்றே பெருமானிடம் வந்து சிரங்கு என்று கூறினான். பெருமான், 'சில நாள் பொறுத்து குணமாகும்" என்றார்கள். சிறுவன் சிரித்துக் கொண்டே பஞ்சை எடுத்தான். பஞ்சு இருந்த இடமெல்லாம் பெருஞ் சிரங்காய் விட்டது. பின்பு பெருமானின் மேன்மை தெரிந்து வருந்தி வேண்டினான். பின்னர் பெருமான் கருணையால் குணமடைந்தான்.

 

வள்ளலார் வரலாற்றுக் குறிப்புகள்

வள்ளலார் வரலாற்றுக் குறிப்புகள் 

இயற்பெயர்: இராமலிங்கம் 

சிறப்புப்பெயர்: திருஅருட்பிரகாசவள்ளலார்

பிறப்பு: 05/10/1823 சுபானு புரட்டாசி 21

பிறந்த ஊர்: மருதூர் வடலூரிலிருந்து தென் கிழக்கில் 10 கிலோ மீட்டர்.

பெற்றோர்: இராமையா - சின்னம்மையார் 

 விளங்கிய இடங்கள்: சென்னை, வடலூர், கருங்குழி, மேட்டுக்குப்பம்

இயற்றிய நூல்கள் : மனுமுறைகண்ட வாசகம் ஜீவகாருணிய ஒழுக்கம் 


பாடிய பாடல்கள் :திரு அருட்பா-ஆறு திருமுறைகள் 


நிறுவிய நிலையங்கள் 

சன்மார்க்க சங்கம் (1865) 

சத்தியதருமச்சாலை (23.05.1867) 

சத்தியஞானசபை (25.01.1872 )

சித்தி வளாகம் (1870). 

திருக்காப்பிட்டு 30.01.1874, ஸ்ரீமுக தை 19. 


No comments:

Post a Comment