உ
இராமலிங்கர் துணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வரவேற்பு வாயில்
வள்ளலாரின் மாணாக்கர்களின் அருள் வரலாறு
கல்பட்டு ஐயா அருள் வரலாறு
114 ஆண்டு கல்பட்டு அய்யா குருபூஜை
26.04.2016
தொகுத்தவர் திரு. சீனி சட்டையப்பர் அய்யா
"அருள் சிவா வெளியீடு" மு.இரவிச்சந்திரன்
வள்ளலார் கொள்கை நெறிபரப்பு இயக்கம் அருள்சிவா டிரேடர்ஸ் , வடலூர்
உ
இராமலிங்கர் துணை
கல்பட்டு ஐயா
திருவடி முறையீடு - திருவருட்பா
சீர்இடம் பெறும் ஓர் திருச்சிற்றம் பலத்தே
திகழ்தனித் தந்தையே! நின்பால்
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன்; கருணை
செய்தருள்; செய்திடத் தாழ்க்கில்
யாரிடம் புகுவேன்? யார் துணை என்பேன்?
யார்க்குஎடுத்து என்குறை இசைப்பேன்?
போரிட முடியாது இனித்துயரொடு; நான்
பொறுக்கலேன்; அருள்இப் போதே.
சிவகனி தொழுவாம் -வான்ஒளி அமுதக்காவியம்
திருநறுங் குன்றத்து எழில்மலை முடிமேல்
குருவருங் காலங்குறித்து, இனிது அமர்ந்தே,
ஒருவரும் இல்லா உவமைநம்பெருமான்
திருவருள் பெற்ற சிவகனி தொழுவாம்.
1.அடியார் வருகை
1867-ஆம் ஆண்டு, கோடைக்காலம்.க கடும் வெப்பம் உயிர்க்குலத்தை கலக்கி நின்றது. நீர் எங்கே என்று தேடி நிலைகுலைய வைத்தது. நிழல் எங்கே என்று ஓட வைத்த சூரியனின் கதிர்களால் சூடேறி நிற்கும் மண்ணில் கால் வைத்து நடப்பதற்கே மக்கள் அஞ்சும் உச்சிவேளையில் ஓர் தவ வடிவம் நடந்துகொண்டிருந்தது!
அண்டம் எல்லாம் தலைவணங்கும் வடலூரைக்காண அடங்காத ஆவல்! வான்நாடர் கூடி நின்று வாழ்த்தும் வடல் வெளியைக் காணத் தணியாத ஆர்வம்! உண்மையைத் தெரிந்து கொள்ளச் சித்தர்கள் திரண்டு நிற்கும் உத்தர ஞான சிதம்பரமாம் வடலூரை வணங்கும் குறையாத ஊக்கம்! மக்கள் குலம் பசி அடங்கவும், வள்ளலின் வாயுரை கேட்கவும் வந்து வந்து போகும் வடலூரைக் கண்டுவிட வேண்டும் என்னும் உயரிய நோக்கம்! கருத்தினில் களிப்பு பொங்க, வயிற்றினுள் பெரும்பசி பொங்க, வள்ளற் பெருமான் மலரடிகளை வணங்கும் வேட்கை கொண்டு வடல்வெளி நோக்கி வந்துகொண்டிருந்த்து அத் தவவடிவம்.
அவர் ஓர் அடியவர்! விரைந்து சென்று பெருமானின் திருமுன்பு அடியற்ற மரம்போல் விழுந்திட்டார்!
கண்டுவிட்ட மகிழ்ச்சிக் கண்ணீர்; உணர்ச்சிப் பெருக்கில் உடல் புல்லரிப்பு; தாய்முகம் கண்டு தேம்பும் இளங்குழந்தையின் ஏக்கம் கடைத்தேறும் காலம் வருமா? என்ற வினாவுக்கு விடை கண்ட மனநிறைவு; இத்தனையும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருக்கு நிலையில் அருட் சூரியனின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு அவ்வடியவர் கிடந்தார். வெளியில் ஆட்சி செய்யும் வெங்கதிரின் கொடுமைகளை எல்லாம் அந்த ஒளிக்கதிரவன் மாற்றிவிட்ட அருமை கண்டு ஆற்றாமை கொண்டு வீழ்த்தி கிடக்கும் அடியவரை அரவணைத்து ஆறுதல்மொழி வழங்கினர் வள்ளற்பெருமான்.
2.போதாதாங்காணும்?
வந்தடைந்த அடியவரின் உள்ளத்துப் பசியையும் வாட்டு வயிற்றுப் பசியையும் ஒருங்கே உணர்ந்திட்டார்கள் பெருமான் கூழை கரைத்து வைத்திருக்கும்படி முன்னரே திருவாய் மலர்ந்திருந்தார்கள் குறிப்புணர்ந்த அன்பர்கள் கூழினைக் கொண்டு வந்தனர்.
நம்பெருமானின் திருக்கைகள் கூழினை ஏந்தி வார்க்கத் தொடங்கின. இருகை ஏந்திக் குடிக்கத் தொடங்கினார் வந்த அடியவர் நமக்கும் கூழ்தானா உணவு என்று அவர் எண்ணவில்லை பெருமான் வழங்குவது பேரமுதமாகுமன்றோ? ஊற்ற ஊற்ற குடித்துக் கொண்டே இருந்தார். வயிறு நிறைந்துவிட்டது. இளைப்பற கிடைத்தக் கூழ் போதும் போதும் என்று சொல்லத் துணிவு எழவில்லை. சற்குருநாதரிடம் சாதாரண அடியவன் எப்படிப் போதும் என்று சொல்வது என நினைத்தார். அதனால் மேலும் மேலும் குடித்துக் கொண்டிருந்தார். அதனை உணரலானார்கள் நம்பெருமான்.
"போதாதாங்காணும்” என வினவி கூழ் ஊற்றுவதை நிறுத்தி கொண்டார்கள். இசைவு கிடைத்த பின்பே அடியவரும் குடிப்பன நிறுத்தினார். பசி ஓடியது! தத்துவங்கள் தழைத்தன அகத்திலும் முகத்திலும் மலர்ச்சி ஏற்ப்பட்டது. ஆன்ம விளக்கமும், கடவுள் விளக்கமும் அதிகரித்தன. ஏழையர் பசி போக்கும் அவ்வுண்மை வழிபாட்டிற்கு ஆட்பட்ட அடியவர் யார்? தொண்டர் யார்?
3.கல்பட்டு ஐயா
அவர்தான் கல்பட்டு ஐயா! திருநறுங்குன்றத்தில் வள்ள'ல் சென்றெடுத்த நன்மணி! அவரின் உள்ளங் கண்டு உவகை கொண்டு ஏற்றக் கொண்ட இயக்கத் தொண்டர்!
4.தொண்டர் குழாம்
நம்பெருமான் திருவடிகளைப் போற்றி நின்றவர்கள் பல ஆட்பட்ட அடியவர்கள் பலர்; மாணவர்கள் பலர். அவர்களுள் கல்பட்டு ஐயா , தொழுவூர் வேலாயுதனார்; இறுக்கம் இரத்தினம், காரணப்பட்டு கந்தசாமியார், கருங்குழி புருடோத்தமானார் போன்றவர்கள் தன்மையானவர்கள் அவர்களுள் மிகவும் குறிப்பிடத் தக்கவர் ல்பட்டு ஐயா காரணம் பெருமான் புகழ்கண்டு போற்றுதற்கு அனைவரும் கூடியவர்கள் கல்பட்டு ஐயாவோ வள்ளலே சென்று ஆட்கொள்ளும் தகுதி பெற்றவர்!
5.கல்பட்டு
செந்தமிழ் நலம்சார் தெய்வத் திருநாட்டில், நடு நின்று மேம்படுவது நடுநாடே! அத்தகு நடுநாட்டில் விழுப்புரம் வட்டத்தில் உள்ள ஊரே கல்பட்டு. அவ்வூரில் தோன்றியவர் கல்பட்டு ஐயா. இவரின் இயற்பெயரும் இராமலிங்கம் என்பதுதான்! இவரின் பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர், கல்வி, உறவினர் பற்றிய எவ்விதச் செய்தியும் இதுவரையில் கிடைக்கவில்லை. ஆயினும் சிறுபொழுதிலேயே தெய்வ நறியினை எய்திடும் நாட்டம் இவருக்கு இயல்பாகவே இருந்தது. அதற்குரிய சாதனமாக நல்யோக நெறியினைப் பின்பற்றினார். அம்முறையிலேயே சிறந்து மேம்படவும் முற்பட்டார்.
6.தமிழகப் பயணம்
அதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பயணம் செய்தார். தனது நிலையைச் சிறப்படையச் செய்யவும் பெரியோரை நாடினார். எத்தனையோ பெருமக்களை தவசியர்களைச் சந்தித்தார். யாரும் கல்பட்டு ஐயாவின் அனுபவத்தினும் தலை சிறந்து நிற்கக் கண்டிலர். தனக்கு நெறிகாட்டும் குருமார்களையும் கண்டிலர். இந்நிலையில் தம்மிடம் உள்ள அனுபவமே போதும் என்று மீண்டும் கல்பட்டிற்கே திரும்பினர்.
7.திருநறுங்குன்றம்
விழுப்புரம்-விருத்தாசலம் இருப்புபாதையில் உளுந்தூர்பேட்டை நிலையத்திலிருந்து வடமேற்கே 16-கி.மீ தொலைவில் திருநறுங்குன்றம் என்னும் ஊர் விளங்குகிறது. அவ்வூரில் உள்ள அப்பாண்டநாதர் கோயில் பழமை வாய்ந்தது. சோழர் கால கல்வெட்டுக்கள் அங்குக் காணப்படுகின்றன. தற்போது அவ்வூர் திருநறுங்கொண்டை அல்லது திண்ரங்கோட்டை என வழங்கி வருகிறது.
தனது தவநெறி வாழ்வுக்குப் பொருத்தமான இடம் திருநறுங்குன்றம் என்று கல்பட்டு ஐயா அறிந்தார். ஆதலின் அவ்வூர் சென்றார். குன்றுகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அங்கே குடில் அமைத்துத் தவயோக நெறியினைத் தாம் பயின்ற அளவில் பழகி நின்றார். என்றேனும் ஒரு நாள் மேல் நிலைபெறுவோம் என்ற உணர்வில், குன்றாமல் அந்நெறியில் நின்றிட்டார். அத்தகு நிலையில் குன்றிலிருந்து ஊருக்குள் சென்று உச்சிப்போதில் மட்டுமே கையேற்று உண்டு நின்றிட்டார்.
8.யோகக் காட்சி
வழிகாட்டும் நல்லாசிரியர் தமக்கு வாய்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்து வந்தது. கல்பட்டு ஐயாவின் நல்லதோர் ஏக்கத்திற்கு விளக்கம் கிடைத்தது. அவருடைய யோகக்காட்சியில் குறிப்பிட்ட ஒரு திங்களில், குறிப்பிட்ட கிழமையில், குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நாழிகையில் ஓர் ஞானாசிரியர் வந்து, வலுவில் ஆட்கொள்வார் என்ற குறிப்புப் புலனாயிற்று. கிடைக்கப்பெற்ற அத்திருவருட் குறிப்பின்பால், மாறாத நம்பிக்கை கொண்டார் அத்தெய்வத் திருநாளை அன்பர் பலர்க்கும் சொல்லி, ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தார்.
இச்செய்தியினை, "திருநறுங்குன்றத்தில் கல்பட்டு ஐயா என்னும் யோகியார், தமக்கு ஓர் ஞானாசிரியர், இன்ன மாதம், இன்ன தேதி இன்ன கிழமை, இத்தனை மணிக்கு, வலிய வந்து ஆட்கொள்வார் என்று தாம் உணர்ந்தபடி, பலருக்கும் உரைத்து, பலரும் சூழ அவரால் குறிப்பிட்ட அதே நேரத்தில் நமது வள்ளற் பெருமான் வருகையை மாறாத நம்பிக்கையுடனும் பேரன்புடனும் எதிர்பார்த்திருந்தார்" என்று இராமலிங்க சுவாமிகள் சரித்திரச் சுருக்கம் எழுதிய பிறையாறு உயர்தவ சிதம்பர சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.
9.ஞான ஆசிரியர் ஆட்கொள்ளல்
எங்கு எங்கு இருந்து உயிர் ஏது ஏது வேண்டினும் அங்கு அங்கு இருந்து அருளும் நம்பெருமானுக்குக் கல்பட்டு அடியவரின் வேட்கை புலனாயிற்று; அருள் தவிப்பு விளங்கியது.
மாறாத அன்பும் மங்காத நம்பிக்கையும் பூண்டு நிற்கும் அடியவரின் திருவூர் நோக்கி, மாட்டு வண்டி புறப்பட்டது. வடற்பெரு வெளியின் வேந்தரைச் சுமந்து கொண்டு தன் நடையில் சென்றது அது. திருக்கோயிலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்து வண்டியை அனுப்பிவிட்டு வள்ளற்பெருமான், தாம் மட்டும் திருநறுங்குன்றத்திற்கு நடந்தருளினார்கள்.
எவ்வுயிர்த் திரளும் தன் உயிர் எனவே எண்ணி இன்புறச் செய்யும் நம் பெருமானின் பொன்மலரடிகள் அவ்வூரிலும் பதியலாயின. கன்று இருந்து இடம் நாடிக், காராம் பசு செல்வது போல், மன்றிலே நடமிட்டுக் களிக்கும் திருவடிகள், நறுங்குன்றத்து மலைமேலும் நடைபயின்றன.
கருணாமூர்த்தியின் பேரருட் கண்மலர்கள், கல்பட்டாரின் குடிலின் மீது தோய்ந்திடலாயின! இரக்கத்தின் திருவுருவின் வரவினை எதிர்பார்த்து, எழுச்சியுடன் கூடியிருந்தனர் பலர். குறித்த காலத்தில், குடிலில் அடிவைத்துப் புகுந்திட்டார் அருட்பிரகாசர். கருங்கல் மனத்தினையும் கசிந்து உருக்கும் வடிவினையும், பேரின்ப நிலையினை வளர்க்கின்ற கண்களையும் ஒளி எனவும் வெளி எனவும் விளங்கும் திருவடிமலர்களையும் கண்டுவிட்டார் கல்பட்டார்!
உள்ளந் துடிக்க, உயிர் துடிக்க, உணர்ச்சி வெள்ளம் உடல் முழுதும் பரவி, மயிர்க்கால் சிலிர்க்க, உணர்ந்தபடி வந்து அருளிய திருவுருவங் கண்டு, அடியற்ற மரம்போல் வீழந்தார்; கண்ணீர் மலர்களால் திருவடிகளை அர்ச்சித்தார்; மகிழ்ச்சிப் பெருக்கால் விம்மினார்; அருட்சத்தியின் திருக்கரம் பற்றிய வள்ளலின் தெய்வத் திருக்கைகள் கல்பட்டு அடியவரைப் பற்றித்தூக்கிடலாயின.
மறையமுதம் பொழிகின்ற பெருமானின் மலர்வாய் இன்பத் தேன்துளிகளை வழங்கியருளியது! கல்பட்டு அடியவரும் மற்றும் உள்ள அன்பர்களும், பெருமானின் திருவரவால் பெரும் பூரிப்பும், பேரெழுச்சியும்,பேருணர்ச்சியும் உற்று நின்றிட்டார்கள்!
"பண்ணிய பூசை பலித்தது! பலித்தது! பரவினேன்; பணிந்தேன்; பதமலர் சூடினேன்; எண்ணிய படியே என்னை ஆட்கொண்டு செல்லுங்கள் என் இன்னுயிர் நாயகரே" என விரும்பி வேண்டி வணங்கினார், கல்பட்டார்.
சற்குருமணியின் சந்நிதானம் அடைவோம்; உயிர் தொண்டு செய்து துயர் துடைப்போம்; கிடைத்தற்கரிய அறிவுச் சுடரைப் பெற்று விட்டோம் என்று பூரித்து மனக்களிப்புற்றார் அவர். நம்பெருமானோ, "உத்தரவு தருவோம். அப்போது வந்தடையலாம்" என்று மெய்ம்மொழியினை அருளினார்கள்.
மெய்ஞ்ஞான தேசிகரின் கட்டளைக்கு அட்டியும் உண்டோ? முடிதாழ்ந்து, அடிபணிந்து, அதனை முடிமீது கொண்டிட்டார் அவ்வடியவர். இச்செய்தியினை வள்ளற் பெருமானுக்குத் தொண்டு பூண்டு, அவர்களையே வழிபாடு கடவுளாகச் கொண்டு, வாழ்நாள் எல்லாம் திருவருட்பா இசையமுதில் தோய்ந்தது, பிறரையும் தோய்வித்துச் சிறந்து சீடராக வாய்த்த, காரணப்பட்டு கந்தசாமி என்பார்,
அருயோகம் செய்கல்பட்டார் சங்கற் பம்போல்
திருநறுங்குன் றத்தவர்க்குத் தீக்கைசெய்த சற்குருவே
திடஞானம் பெற்றுய்யத் தீக்கைசெய்த பின்னர்
வடலூரில் வந்திருக்க வாய்மலர்ந்த சற்குருவே!
(சற்குரு புலம்பல் கண்ணி 52,53)
என்று பிரபந்தத் திரட்டு என்னும் நூலில் தெரிவிக்கின்றார்.
இதிலிருந்து நம்பெருமான் கல்பட்டாரை ஆட்கொண்ட
செய்தியினை அறிய முடிகிறது. மேலும் இசைப்பாட்டாக்கி காட்டுகின்றார் இவ்வரலாற்றுச் செய்தியினை.
பல்லவி
கதிபெற்றுய்யக் கடைக்கண் பாரையா ஸ்ரீ ராமலிங்கையா
கருணை செய்ய எமக்கிங்கு ஆரையா?
அநுபல்லவி
மதிதரு வடற்சபை ஸ்தாபக
மதிதலம் புகழ்பெறு வியாபக
சரணம்
செல்வர்கள் சூழும் திண்ரங் கோட்டை மலையிற்
சேர்ந்திருந்து அஞ்ஞானம் ஏக சிறந்தகற்பட் டிராமலிங்கப்
பிள்ளை சிவயோகம் பன்னா ளாகச்
செய்திருந்துந் தன்னைத் தலைவனை விளக்கும் செய்யகுரு
வலிந்தே வந்து கிளக்கும் சிந்தைமேற் கொண்டிருக்கப் பலர்
மதிக்கும் திறன் அறிந்தோமைத் தக்கவர் விதிக்கும்
இராமலிங்கசுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை -11
எனவே அவரை வலிந்து ஏற்றுக் கொண்ட உண்மையைச் காரணப்பட்டார் பாடல்களால் அறிகிறோம். அச்செய்தியினை உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்ட பண்டிதை அசலாம்பிகை அம்மையாரும் தெரிவிக்கின்றார்.
இலகும் கல்பட்டு ஐயா என்று இசைக்கும் யோகி குருபரனார்
வலிய அணைந்துஆட் கொண்டருள வருதல் வேண்டும்எனும் விருப்பம்
நிலவி நறுங்குன் றப்பதியில் இருந்தார்! நிமலன் அதனை அறிந்தே
அலகில் அருளால் அடைந்து அவர்க்கும் தீட்சை அளித்து
இராமலிங்க சுவாமிகள் சரிதம்
மேலும் நம்பெருமான் 2-8-1866-ல் ஒரு திருமுகம் வரைந்தருளினார்கள். அத்திருமுகம் காட்டு செய்தி:
இஃது
திருநறுங்குன்றம் மகாராஜராஜஸ்ரீ நயினார் இராமசாமி
நயினாரவர்கள் திவ்ய சமூகத்திற்கு
உ
சுபம் உண்டாக சுபம்
அன்பு அறிவு ஒழுக்கம் கருணை முதலிய நன்மைகளாற் சிறந்த சிவத்தைப் பொருள் என்று உணர்ந்து சன்மார்க்கத்தில் விளங்குகின்ற தங்கட்கு வந்தனம். வந்தனம்.
தங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடிக் கேட்க விருப்பமுடையவனாக இருக்கிறேன்.
அன்புள்ள ஐயா! சுமார் இருபத்தைந்து தினத்திற்கு முன்
இவ்விடத்திலிருந்து சிவஞான விருப்பினராகிய ராமலிங் மூர்த்திகளும் சண்முகப்பிள்ளை என்பவரும் தங்களிடம் போய்வருவதாக் குறித்து வந்தார்கள்.
அவர்கள் அவ்விடம் வந்திருப்பது வேறிடம் போயிருப்பதும் தெரியவில்லை. தங்களிடத்தில் அவர்கள் இருந்தால் தற்காலம் அவ்விடத்தில் மழையில்லாமையால் மிகவும் நிர்ப்பந்தமாக விருப்பதாய் கேள்விப்படுகிறேன். ஆதலால், தாங்கள் அவர்களை இவ்விடம் வரும்படி செய்யவேண்டும். அவர்கள் தங்களிடத்தில் இல்லாமல் வேறிடத்திலிருந்தால், அவ்விடம் இவ்விடமென்று எனக்குத் தெரிவிக்கவேண்டும். தாங்களும் சிவத் தியான சகிதர்களாய்தேக விஷயத்திலு மற்றைக் குடும்ப விஷயத்திலும் சர்வ சாக்கிரதையோடு இருக்கவேண்டும். நற்குணத்திலும் சிவபக்தியிலும் சிறந்த தங்கள் தம்பியார்க்கும் தங்கள் புத்திர சிகாமணிக்கும் க்ஷேமம் குறிக்க வேண்டும். நான் தற்காலம் கூடலூரிலிருக்கிறேன். வந்தனம், நமது ராமலிங்க மூர்த்திகளுக்கும் வந்தனம்.
அக்ஷய-ளூ ஆடி/மீ/உ 19
இங்ஙனம் சிதம்பரம் இராமலிங்கம்
"இதனால் கல்பட்டு சுவாமிகளை அடிகள் ஆட்கொண்டது 1866க்கு முன்னரே என்பது பெறப்படுகிறது" என்று உயர்தவ ஊரன் அடிகளார் எம் எழுதிய இராமலிங்க அடிகள் வரலாற்றிலும் தெரிவித்துள்ளனர்.
10.உத்தரவு வந்தது
சன்மார்க்க சங்கம் தொடங்கிய காலையிலேயே அஃதாவது தருமச்சாலை தோற்றுவித்ததற்கு முன்பே கல்பட்டு அடியவர்க்கு வள்ளற்பெருமாள் உத்தரவு வந்தது!
காலம் கனிவதற்கு காத்துக் கிடந்த அன்பர்க்கு உவகை ஏற்பட்டது. ஞானப் பயிர் வளர்க்கும் நோக்கோடு ஞானச்சேவடிகட்கு ஈனமில் பணி செய்திடும் திடத்தோடு புறப்பட்டார் கல்பட்டார்.
11.ஞானாசிரியரைக் காணல்!
கருங்குழியினை வந்தடைந்தார்; பெருங்கருணை மலரடிகளைத் தொழுதிட்டார்; அழுதார்: மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளத்தைக் குளிப்பாட்டினார்; கண்ணீர் வெள்ளமோ உடலைக் குளிப்பாட்டியது! அவர் உணர்ச்சிப் பெருக்கினை உணர்ந்த நம்பெருமான் அரவணைத்து ஆட்படுத்த வேண்டும்தானே? ஆனால் கல்பட்டார்க்குப் பின்னும் ஓர் உத்தரவு பிறந்தது!
"ஆறுமாத காலம் பூர்வ ஞான சிதம்பரமாகிய தில்லையம் பதியிலிருந்து, பின் நம்மை வந்தடையுங்காணும்" என கட்டளை இட்டார்கள் பெருமான். திருக்குறிப்பின் நோக்கம் திருத்தொண்டர்க்கு புலனாயிற்று. மாமறைகளும் சூடரும் பாத முடிகளைச் சூடிக்கொண்டு பயணமானார் கல்பட்டு ஐயா.
12.தில்லை வாழ்க்கை
சிதம்பரம், திருமூலர் சிவயோகத்தில் திளைக்கின்ற இடம்; பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆனந்த நடங்கண்டது. நந்தனார் ஒளிப்பிழம்பில் ஒன்றியது; மாணிக்கவாசகர் சுத்த வெளியில் கலந்தது சீர்காழி முத்துத்தாண்டவர் ஆடுகின்ற சேவடியை அடைந்தது.
எனவே ஒப்பற்ற தில்லைச் சிற்றம்பலத்தில் பூர்வ ஞான சிதம்பரத்தின் பெற்றிகள் விளங்குவதனால், அங்கிருந்து பயின்ற மேம்பட வேண்டும் என்றே வள்ளற்பெருமான் தம் அடியவரை அனுப்பி வைத்தார்கள். பெருமான் அருளிய வண்ணம் ஆறு மாதங்கள் தில்லைக் கூத்தனுக்கு அடிமை பூண்டார் கல்பட்டார். அதன் பின்னர் மீண்டிட்டார் வடல் வெளிக்கு! அப்போதுதான் கோடை காலமும் கடும் வெப்பமும், கொடுங்கோல் ஆட்சி புரிந்தது. அருள்வெளியாம் வடலூரின் அறச்சாலையில் கூழ் அருந்தி நின்றார் அக்காலையில்தான், "போதாதாங்காணும்" என்று வள்ளல் பொன்னுரை வழங்கியருளினார்கள்!
13.சிலுகிழைக்காதீர்கள்!
அப்போது பெருமானின் ஆணையின்படிச் சாலையின் கிழக்கு பக்கத்தில் கிணற்றிற்கருகில் இருந்த குடிலில் புகுந்திட்டார் ஒருமையுடன் வள்ளலின், திருவடி மலர்களைத் தியானித்து யோகத்தில் அமர்ந்திட்டார். “எண்ணிய வண்ணம் இரு" என்ற இடத்தில் இருந்தது மனம். அவ்வாறு இருந்தது ஒரு சில மணிகளும் அல்ல. ஒரு வாரத்திற்குப் பக்கமாக, அப்படி ஒருமுகப்பட்டு ஒன்றி நின்றா அவரது நிலை பலருக்கும் வியப்பளித்தது. அவ்விடத்தில் சூழ்ந்து நிற்கத் தொடங்கினார்கள். அடியவரின் ஒருமைக்கு ஏதேனு இடையூறும் நேரலாம் என்று உணர்ந்த வள்ளற்பெருமான "சிலுகிழைக்காதீங்காணும் எழுந்து வருவார்; பொறுத்திருங்கள்” என்ற தொல்லை கொடுக்காதிருக்கும்படித் கட்டளையிட்டார்கள். ஞான தேசிகரால் ஆட்கொள்ளப்பெற்ற கல்பட்டார் தன்னை மறந்து பரவச நிலை எய்தினார்.
14.ஓலைக்குடில் யோகம்
அதற்குப் பின்னர் பரவசநிலை மாறிப் பன்முறை பணிந்து நம்பெருமானைப் போற்றி நின்றார். யோகநிலை மாறாது விளங்க தனியிடம் தந்தருளினார்கள் வள்ளல். அங்கே ஒளிவளர் உணர்வில் யோக நித்திரை செய்தது அவ் யோகக் குழந்தை. அக்குடில் இப்பொழுதும் சாலைக் கிணற்றில் தென்புறம் திகழ்கின்றது.
சாலை, பிணி தீர்க்கும் மருந்தகம். பசிப்பிணி ஒரு புறம்; அறியாமைப் பிணி மற்றொரு புறம். வருவார் வகை அறிந்து மருந்தளித்தார்கள் வள்ளற்பெருமான். பசிப்பிணிக்கு ஆவன செய்தபின் அறிவுப் பசியையும் கவனித்தார்கள். அன்பர்கள் தரம் அறிந்து சொற்பொழிவு செய்தார்கள். கல்பட்டாருக்கு வேண்டிய பகுதிகள் வருங்கால் வள்ளலே அவ்வடியவரை திருச்சமுகத்திற்கு அழைப்பித்தருளுவார்கள்; உரைப்பன உரைத்தருளுவார்கள்; மெய்யமுதம் ஊட்டுவார்கள்; மேன்மைக்கு வழி காட்டுவார்கள். பெருமான் கழலினை நினைந்து ஒளிவளர் ஞான தீபத்தினின்று உருவாகும் உணர்வினைப் பருகிப்பருகிப் பரவசம் அடைந்திட்டார்!
15.உம்மைச் சொல்லவில்லைங்காணும்!
ஒரு சமயம் சாலையில் வள்ளல் கருத்து மாமழை பொழிந்து கொண்டிருந்தார்கள். மழைபெய்தாலும் உழுது வைக்காத நிலத்தில் 'ஈரங்காக்காது அதைப்போல பக்குவம் அற்றவர்களுக்குச் சொல்வதெல்லாம் வீண் என்று கருதினார்கள் போலும்! சொற்பொழிவிற்கு இடையில், "இதுகாறும் அறிவுறுத்தியும் நூற்றில் ஒருவரேனும், ஆயிரத்தில் ஒருவரேனும் தேறவில்லையே” என்று வருந்தி உரைத்திட்டார்கள்.
அதுகேட்டுக் கூட்டத்தார்கள் அனைவரும் இடித்த புளி போலும் எழுச்சி இன்றி இருந்திட்டார்கள். ஐயாவின் உரை ஒளி, பக்குவப்பட்டுள்ள கல்பட்டாரின் நெஞ்சக் கண்ணைத் தாக்கியது; கூசி ஒடுங்கினார்; உடல் படபடத்தது; சோபம் மீதுற சோர்ந்து வீழ்ந்திட்டார்; ஆற்றொணா துயர்க் கடலில் அழுந்திட்டார்!
அது கண்டேனும் யாரும் தம்மை அலட்டிக் கொள்ளவில்லை ஏன் வீழ்ந்தார் என்று எண்ணவே அவர்களால் முடியவில்லை. எவ்வுணர்வும் அற்றவர்களாகவே இருந்தார்கள்!
அடியவரின் மனநிலை அறிந்தவர்கள் நம்பெருமான் எனவே அயர்ந்து விழுந்தவரை விரைவாக எடுத்து ஆசுவாசப் படுத்தினார்கள். அயர்வினை நீக்கினார்கள் உணர்ச்சியும் விழிப்பும் பெறச்செய்தார்கள்! தன் நிலைக்கு வந்ததும்.
“உம்மைச் சொல்லவில்லைங்காணும்” என்று ஆறுதல் மொழி கர்ந்தருளினார்கள்.
தலைமை சான்ற சாதகன் ஒருவன் தான் தேற வில்லை என்று உணர்ந்தால் அப்படித்தான் அவனுக்குச் சோபம் உண்டாகும். அத்தோடு ஆருயிரினை விட்டு விடக் கூடத் தயங்கமாட்டான். அத்தகைய தீவிரதரம் உத்தமப்பக்குவம் வாய்க்கப்பெற்றவராகக்கல்பட்டு அடியவர் மேம்பட்டு விளங்கினார்!
16.தொண்டு செய்வது உண்டுங்காணும்
மாறாமல் ஒளிரும் யோகத்தில் அயராது திளைத்திட்டார் கல்பட்டார். அதன் காரணமாகத் தாளாத வெப்பத்திற்கு ஒருமுறை அடியவர் ஆளானார்; உடல் முழுவதும் சிரங்கு கண்டதாகவும், நீர் பெருகி அது ஆற நீண்ட நாட்கள் ஆயிற்று எனவும் கேள்வி.
அத்தகு நேரத்தில் நாளும் உணவு எடுத்துச் சென்று கல்பட்டு ஐயாவுக்குத் தர கட்டளையிட்டார்கள் பெருமான். இடையில் ஒருமுறை வள்ளல் வெளியூருக்கு எழுந்தருளினார்கள். சாலை அன்பரை அழைத்து மறதியின்றிக் கல்பட்டுக்கு உணவு வழங்கும் படித் திருவாய் மலர்ந்திருந்தார்கள்.
சாலை அன்பர்கள் மேலை அன்பர்கள் ஆகிவிட்டனர்; அவரை மறந்து விட்டனர். எனவே கல்பட்டு ஐயாவுக்கு உணவு செல்லவில்லை."உண்கின்றீர்களா?” என்று கேட்கவும் இல்லை இப்படியே சில நாட்கள் இருண்டு உருண்டன!
வெளியூரிலிருந்து நம்பெருமான் வடல்வெளிக்கு, திரும்பினார்கள். வந்தவுடன் “கல்பட்டுக்கு உணவு போயிற்றோ என்று வினவினார்கள். எல்லோரும் கல்லாய்ச் சமைந்து விட்டனர். மாற்றம் யார் சொல்லுவர்? என்னவென்று சொல்லுவர்? வாயடைத் நின்றனர்! "பிச்! (பைத்தியம்) உணவு கொண்டு வாருங்காணும்" என்று ஏவலிட்டருளி தாமே உணவு கிண்ணத்துடன் கல்பட்டாரிடம் புறப்பட்டருளினார்கள்.
வள்ளற்பெருமான் எழுந்தருள்வதைக் கண்டுவிட்ட கல்பட்டார் பதைபதைத்தார்! உணர்ச்சி வயமானார்கள்! "அடியேனை அழைத்திட்டால் ஆங்குவர மாட்டேனோ? எதற்காக இவ்வண்ணம் எழுந்தருளியதோ? மன்றில் ஒளிரும் சேவடிகள் அன்றுவந்து மலையேறி ஆண்டதுதான் போதாதோ? இன்றும் இப்படியும் மண்ணுறுத்த எழுந்தருள எண்ணியதோ? என்ன செய்வேன்? என்ன செய்வேன்? என்வினை இப்படியும் ஆயிற்றோ?" என்று ஆற்றாமை கொண்டு அவதிப்பட்டார்!
அஃதுணர்ந்த நம்பெருமான்,"அடியார்களுக்குச் சிவ ஞானிகள் தொண்டு செய்வது உண்டுங்காணும் என்று திருவாய் மலர்ந்தருளினார்கள். கல்பட்டு அடிகளின் கையில் தாமரை இலையை வைத்தருளினார்கள். சோற்றினை உருட்டி உருட்டி வைத்தருளினார்கள். அச்சமும் நாணமும் அயர்ச்சியும் சோர்வும் அப்படியே கெளவிக் கொள்ள, வாங்கி வாங்கி உண்டு வயிறு புடைத்து நின்றார் கல்பட்டார்.
தேவர்களும் மூவர்களும் ஒரு சிவஞானியைக் கண்டு வழிபடுவது அரிதினும் அரிதாம். வள்ளற்பெருமானை ஒத்த சிவஞானிகள் தொடர்பு யாரோ சிலருக்குத் தான் கிட்டப்பெற்றிருக்கின்றது. அத்துணை பேரும் கொடுத்து வைத்தவர் அல்லவா? அதிலும் சிவஞானப் பெருஞ்செல்வர் செய்யும் தொண்டினை, ஏழைக் கல்பட்டார் ஏற்ற எளிமை தான் என்னையோ! என்னையோ!
17.ஏழைகளுக்கு இரங்குங்காணும்!
சாலைக்கு வருவோர் பலராவர், அவர்களுள் வசதி வாய்ந்த வரும் உண்டு; வசதி அற்றவரும் உண்டு அவர்களுக்கு எப்படி உதவுவது? அதுபற்றித் தெரிவிக்க, ஒரு நாள் கல்பட்டு ஐயாவையும் தலை மாணாக்கரையும் வள்ளல் அழைப்பித்தருளினார்கள்.
"ஒன்று உரைப்பேன், ஊன்றிச் செய்யுங்காணும்” என்று உரைத்திட முற்பட்டார்கள்.
"எவ்வகை ஆதரவும் இல்லாத ஏழையர் முகத்தை இங்குள்ளவர் பலரும் எண்ணிப் பார்ப்பதில்லை. வெள்ளை வேட்டிக் காரர்களுக்கு வண்டியது கிடைத்துவிடும். ஆதலின் அக்கறை வைத்து ஆதரவற்றவர்கள் பசிநீங்க, கூழினைக் கண்ணும் கருத்துமாக பார்த்து வாருங்கள்" என்று அறிவுறுத்தினார்கள் அது முதற்கொண்டு தலை மாணவரும் கல்பட்டு அடியவரும் போட்டி போட்டுக் கொண்டு நான் நீ எனக் கூழை வார்த்து ஏழையர் வயிற்றுள் பற்றியெரியும் நெருப்பைத் தணித்து வந்தார்கள்.
அத்தகைய உத்தமப் பணியைச் செய்ய நம் பெருமான் யாருக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்? உண்மை அன்பு, உண்மை இரக்கம், உண்மை நம்பிக்கையுடைய உண்மை தொண்டர்கட்கு அன்றோ!
18.மகத்துகள்
பெருமானை அண்டி அருள்நெறி பழகும் அன்பர்கள் பலருள் தலை நின்றவர் கல்பட்டு ஐயா! உண்மைச் சாதனத்தில் தோய்ந்து உண்மை அடிவராய் விளங்கியவர் கல்பட்டு ஐயா. சன்மார்க்கச் சங்கத்துச் சாதுக்களின் வரிசையில் முன் நின்றவர் கல்பட்டு ஐயா. அவரைச் சன்மார்க்கச் சங்கத்து மகத்து அதாவது மகாத்மா என்று அக்காலத்திலேயே அழைத்தனர்.
ஒருகால் நம்பெருமான் தொழுவூர் வேலாயுதனார் பாடல்களை ஆய்ந்து உபயகலாநிதிப் பெரும்புலவர் என்னும் உயரிய பட்டத்தினை வழங்கி மகிழ்வித்தார்கள். அப்படித் தலைமாணாக்கரின் பாடல்களைப்
பார்வையிட்ட போது, அது சன்மார்க்கச் சங்கத்து சாதுக்கள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அப்பட்டமளிப்பு விழாவிற்குக் கல்பட்டாரும் நம் பெருமானால் அழைக்கப்பட்டார். இச்செய்தியினை, தொழுவூராரின் திருமகனார் திருநாகேசுவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"ஒரு காலத்தில் இந்நூலாசிரியர் (தொழுவூரார்) பத்தியினால் பொறித்து வைத்திருக்கும் பாக்களை தர்மலிங்கபிள்ளை, வெங்கடேச ஐயர், ஆடூர் குருக்கள் என்னும் சபாபதி சிவா சாரியார் முதலியர் மூலமாகக் கேள்வியுற்று சுவாமிகள் அவைகளை வரவழைத்து அவ்விடம் கூடியிருந்த சமரச வேத சன்மார்க்க சங்கத்தினராகிய ஆனந்தநாத சண்முக சரணாலய சுவாமிகள், கல்பட்டு இராமலிங் சுவாமிகள் முதலிய மகத்துகள் முன்னிலையில் தானும் உடனிருந்து அவைகளின் சொற்சுவை, பொருட்சுவை முதலியவைகளைளை ஆராய்ந்து வியந்து,"நமது முதலியாரப்பா மதுர வாக்கிது; வித்துவா பாட்டிது” என்று இடையிடையே அருமை பாராட்டி, "மலர்வாய் மலர்ந்த மணிவார்த்தையிது” என்று தமது திருக்கரம் கொண்டே வரைந்து "உபயகலாநிதிப் பெரும்புலவர்" என்னும் பட்டமளித்துப் பொறித்து வைத்துங் களித்தனர்"
மார்க்கண்டேய புராணம், தொ.வே.வரலாறு.
மேற்குறித்த வரலாற்றுச் செய்தியின் மூலம் கல்பட்டு ஐயா சன்மார்க்கச் சங்கத்தினரால் பெரிதும் மதிக்கப்பட்ட மகத்துகளுள் ஒருவர் என்பது தெரிகின்றது.
19.கிடக்க விரும்புதுங்காணும்!
ஒருகால் மாட்டு வண்டியில் செய்தார்கள் நம்பெருமானு கல்பட்டாரும். இடையில் பெருமான் கல்பட்டாரை நோக்கி, "கிடக்க விரும்புதுங்காணும்" என்று படுத்திட விரும்பினார்கள்! உடனே கல்பட்டு ஐயா நம்பெருமான் திருமுடியினைத் தம் தொடைமீது வைத்து தாங்கிக் கொண்டார். அவ்வாறு கல்பட்டாரின் தொடையில் நம்பெருமான் விரும்பியே படுத்திட்டார்கள்!
கல்பட்டாரின் தொடையில் வள்ளல் தம் திருமுடியினை வைத்து படுத்திடும் புண்ணியம் எந்த அடியவர்க்கு இதுவரை கிட்டியது? நம் பெருமான் சாதாரணமானவர்கள் அல்லவே! எல்லாம் வல்ல இறைவனின் அடியினை அறிந்தவர்கள்; நடுவினை அறிந்தவர்கள் முடியினை அறிந்தவர்கள்!
அம்மட்டோ? எல்லாம் வல்ல இறைவனின் அடி நடு முடி கடந்து, அப்பாலும் அப்பாலும் கண்டிட்டவர்கள்! அத்துடன் அது அதுவாக நிறைந்து ஆண்டவனாக விளங்கி நிற்பவர்கள்.
அடிமுடியைக் கண்டோம் என்று சின்னம் பிடித்தவர்கள் அல்லவா நம்பெருமான்?
அப்பெருமானின் அற்புதத் திருமுடியைத் தாங்கும் பெரும் பற்றினைக் கல்பட்டார் தொடைகள் பெற்றன. ஒப்பற்ற அப்பேற்றினைப் பெறுதற்கு எத்தனை கோடி தவந்தான் கல்பட்டாரின் தொடைகள் செய்தனவோ? யாரே பெறுவார் அப்பேறு?
20. உலகமெலாம் இப்படி இருக்கிறதேங்காணும்
அருட்பிராகச ஆண்டவரையும், பெரும்பேறு பெற்ற அடிய வரையும் தாங்கிக் கொண்டு, வண்டி சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது வியப்புக்குரிய நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்தது!
நமது பெருமானின் திருமலர்க் கண்களினின்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்ஙனம் பெருகிய கண்ணீர் கல்பட்டாலின் தாடையை நனைத்தது. பின்னும் கண்ணீர் வழிந்து வண்டி பலகையையும் ஈரப்படுத்தியது. மேலும் வண்டிப் பாரையுங் கடந்து கீழே வழிந்து கொண்டிருந்தது. அப்படிச் சிறிது நேரம் மட்டும் நிகழவில்லை சிலமணி நேரம் தொடர்ந்து நிகழ்ந்திட்டது!
அதனைக் கண்டார் கல்பட்டார். எதுவும் எண்ணவில்லை. மனம் அடங்கிய நிலையுற்று ஒருமையில் நிறைந்தார். அப்படிப் பெருமான் விழி நீர் வடிப்பதும் கல்பட்டார் மனம் அடங்கி ஒருமையில் இருப்பதும், தொடர்ந்து கொண்டிருந்தது. நெடு நேரம் கடந்தும், பெருமான் கண்ணீர் பெருக்குவது நின்றபாடில்லை. மனம் விரிந்து, கண்ணீர் பற்றி சிந்திக்குமானால், பெருமான் கண்ணீர் பெருகும்நிலை கலையுமே என்று கருதியவராய் கல்பட்டு ஐயா, மேலும் ஒருமுகப்பட்டு உள்முகத்தில் நின்றார். பெருமானின் நிலையோ மாறிடவில்லை. தொடர்ந்திருந்து பார்த்து அயர்ந்தஅடியவரின் ஒருமை கலைந்தது. நெஞ்சம் நினைக்கத் தொடங்கி விட்டது.
மூவாசையையும் வென்றவர்கள் நம்பெருமான்; சிவஞானப் பெருஞ் செல்வத்தை நிகரற்றுப் பெற்றவர்கள் அவர்கள் அத்தகைய பெருமானுக்கு உற்றகுறை என்னையோ? என்னையோ? எதனால் இப்படி அழுது கொண்டிருக்கிறார்கள்? என்று நினைத்தார் அடியவர்!
அவர் நினைவைப் பெருமான் உணர்ந்திட்டார்கள். உடனே எழுந்து கண்ணீரைத் துடைத்தவாறு, "பிச்! அதற்கு இல்லைங்காணும்; இந்த உலகமெலாம் இப்படி இருக்கிறதே என்கிறதுக்குத் தாங்காணும்!” என்று உரைத்தருளினார்கள்.
கல்பட்டாரின் விரிந்த நினைவு பெருமானின் நிலையை மாற்றிவிட்டது. அருள்நெறியைக் காதலித்து, உலகமெலாம் துன்பம் அற்று ஒன்றாதல் என்று வருமோ? என்பதனால் அல்லவா இப்படி
அழுது அழுது ஆராமை அடைந்தார்கள்! உலகமெலாம் பேரின்ப நிலையிற் கலந்து அன்பால் ஒன்றுவது என்றோ? என்னும் கவலையால் அல்லவா பெருமான் விழி நீர் வடித்திட்டார்கள்! இந்த கவலை எத்தனை பேருக்கு இருக்கும் என்று எண்ணி எண்ணி துயரில் அழுந்தினார் கல்பட்டு ஐயா. அந்தோ! உயிர்களின் துன்பமெலாம் ஓடி இன்பெலாம் பாடி ஆடும்நாள் எந்நாளோ? என அயர்ந்திட்டார் கல்பட்டார்.
21.நெருப்புப் போட்டுக் கொளுத்துங்காணும்!
வேதாந்த சித்தாந்த சமரசம் புகட்டும் நூல் ஒழிவிலொடுக்கம் அதனை இயற்றியவர் சீர்காழிக் கண்ணுடைய வள்ளலார். அந்நூலுக்கு விளக்கம் எழுதிப் பதிப்பித்தவர்கள் வள்ளற்பெருமான் ஒருநாள் ஆடூர் சபாபதியார் அந்நூலை ஓதிக் கொண்டிருந்தார் அப்பக்கமாக வள்ளற்பெருமான் சென்று கொண்டிருந்தார்கள் படிப்பதைக் கண்டு நின்றார்கள்.
"என்ன புத்தகம்?" என்று வினாவினார்கள்.
சட்டென்று எழுத்து பணிந்து நின்று "ஒழிவிலொடுக்கம் சுவாமி" என்றார் சபாபதியார்.
"இப்புத்தகத்தை நெருப்புப் போட்டுக் கொளுத்துங்காணும்" என்று சொல்லிக் கொண்டே சென்றார்கள் வள்ளல்.
சபாபதியார் நெஞ்சம் ஆட்டங் கண்டது. இதை பதிப்பித்தவர்களே இப்படிச் சொல்லுகிறார்களே! காரணம் எதுவா இருக்கும்? என்று தலையைப் பிய்த்துக்கொண்டார். எண்ணி எண்ணி பார்த்தார்; ஏதும் விளங்கவில்லை.
பெருமானின் உள்ளக் கிடக்கையை விளக்கவல்லாரைப் பற்ற நினைத்ததும், கல்பட்டு ஐயா நினைவு வந்தது. உடனே ஓடினார் கல்பட்டின் முன் நின்றார். அவரிடம் வள்ளல் கருத்தினைச் சொன்னார்' அவர் "நீர் அப்புத்தகத்தை தொடவே அருகரல்லர்!” என்று உண்மையை விளக்கினார். இதுபற்றி இசைவாணர் காரணப்பட்டார் பாடிய பாட்டு ஒன்று பின்வருமாறு உணர்த்துகிறது:
தாமச் சிடுவித்த நூலை ஆடூர்சிவா
சாரியார் அன்பொடு படிக்கத்
தரியாது எதிர்வந்து அங்கியிற் சுடுமென்று
சாற்றிய தால்மனம் துடிக்கத்
தக்கணங் கல்பட்டு சிவயோ கியரைச்
சார்ந்து புகலஅம் மொழிக்கு மெய்யுரை
தக்கவர் நீரலர் என்று புகன்றிடும்
தன்மை யறிந்த எம்போதம் அகன்றிடும்.
-இராமலிங் சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை - சரணம்183
22. உரையமுதம் உண்ணும் கல்பட்டார்
வள்ளல் கேட்பவர் மனங்கொள்ளும்படிப் பல பிரிப்பார்கள். ஒருகால் வடகலை வைணவர்க்காக வேதாந்த தேசிகரின் "மூன்றில் ஒரு மூன்று" என்னும் குறளுக்கு நான்கு உரைகள் உரைத்தருளினார்கள். மற்றொருகால் திரிசிரபுரம் மகாவித்வான், பெருமான் திருமுன்பு பணிந்து இங்கித மாலை பாட்டொன்றுக்கு உரையருள வேண்டினார். வள்ளல் முதல் பாட்டுக்கே உலகியல் தொடர்புள்ள பல உரைகளை நான்கு மணிநேரம் விளக்கினார்கள்; அது அவர்க்குப் புரிந்தது.
மேலும் அனுபவ உரையாகிய பேரின்ப உரையினை சொல்லத் தொடங்கினார்கள். அது புரியாமல் மீனாட்சி சுந்தரனார் திகைத்தார். "தொழுவூராரும் கைவிட்டார்” என திருவாய் மலர்ந்து பெருமான் விரிவுரையை நிறுத்திக் கொண்டார்கள்.
கேட்பவர் பக்குவம் அறிந்து சொல்லும் பாங்கு வியப்புக்குரியது; சமயத்தில் பற்றுள்ளவர்களுக்குச் சைவம், வைணவம் முதலிய சமயச் சார்பான விளக்கம்; மதத்தில் பற்றுள்ளவர்களுக்கு வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதச்சார்பான விளக்கம்; கல்லாதவர்களுக்கு உலகியல் சார்பான விளக்கம்; கற்ற புலவர்களுக்கு இலக்கிய இலக்கணம் பற்றிய விளக்கம்; தொழுவூரார்க்கு உயர்வுடைய விளக்கம்; கல்பட்டு ஐயாவுக்கு அனுபவ விளக்கம் என்று இப்படி தனது கருத்துமணிகளை நம் பெருமான் தந்தருள்வார்கள்.
குருவித் தலையில் பனங்காய் வைக்க அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அவ்வாறு முடிந்த முடிவானதெள்ளமுதக் கருத்துகள் அருந்தி அருந்தி எத்தனைத் தடவைதான் இன்புற்றனரோ கல்பட்டு அடிகள்!
23.கல்பட்டு ஐயாவின் ஆர்வம்
சன்மார்க்க சங்கத்தினர் நன்னெறிகளை உலகினர்க்கு உணர்த்திட விழைந்தனர். அறம்பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகைப் பொருள்களையும் உலக மக்கள் காலமுள்ள போதே அறிந்து அனுபவித்திட உதவ முனைந்தனர்; அங்ஙனம் அறிவதற்கும் அனுபவித்தற்கும் விவேகம் விருத்தியாதல் வேண்டும்.
அதனை அடைவதற்குத் தக்க நன்முயற்சியைத் தரக்கூடிய பத்திரிகை ஒன்றை 1867 க்குப்பின் வழங்குவிக்க இச்சை கொண்டனர். அதற்குச் சன்மார்க்க விவேக விருத்தி எனப் பெயரிட்டனர். அது சிறப்புற நடையிட அன்பர்கள் பலர் நன்கொடைகள் அளிக்க விரும்பினர். ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு உதவிட முன்வந்தனர்.
மாதந்தோறும் தாங்கள் தருவதை ஏடு ஒன்றினில் குறித்து கையொப்பம் இட்டனர். கல்பட்டு அடிகளும் அவ்வேட்டில் கையெழுத்திட்டு 2 அணா பொருள் உதவி செய்ய ஒப்புத அளித்தனர். அதன் விளக்கம் பின்வருமாறு;
வ.எண் ஊர்பேர் கையொப்பம் துகை ரூ.அ.பை
1 சிதம்பரம் இராமலிங்கம் க 0 0
36 கல்பட்டு இராமலிங்கம் 0 2 0
49 திருநறுங்குன்றம் சி.தானப்பநாயினார் 0 2 0
ஆதலில் உலகமெலாம் சன்மார்க்கம் தழைத்து ஓங்குவதில் கல்பட்டு அடிகளுக்கு இருந்த ஆர்வத்தினை அறிந்திடலாம். அதில் அவருக்கு இருந்த ஈடுபாடு பெரிது.
24.அடிமைச்சாசனம்
நமது பெருமான் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில் தெரிவித்தருள்கின்ற செய்திகள் இவை:
அவத்தைகள் அனைத்தும் நீங்கிட நித்தியதேகம் பெற வேண்டும். அதுபெறத் திருவருட் சுதந்தரம் வேண்டும்.
பின்னர், திருவருள் சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து எனது யான் என்னும் தேக சுதந்தரம், யோக சுதந்தரம், ஜீவ சுதந்தரம் என்னும் மூவகை சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரிர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
இவ்வாறு இறைவர் முன்னிலையில் விண்ணப்பித்து பெருவாழ்வை உறுதிப்படுத்திக் கொண்டவர்கள் வள்ளல் அவர்களில் வழிவழி வந்த தொண்டர்கள் பலரும் அடிமைப் பத்திரம் எழுதி உடல் பொருள் ஆவியை நம்பெருமானுக்குப் படையல் செய்துள்ளார்கள் அதனையும் வள்ளல் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அங்ஙனம் விரும்புகின்றவருடைய தற் சுதந்தரத்தை நீக்கித் திருவருள் சுகந்தரத்தை தந்திடும் உரிமையும் உயர்வும் வள்ளற்பெருமானுக்கு இருந்ததனால் அவ்வாறு அடிமைப் பத்திரம் எழுதிப் பெற்றுள்ளார்கள்
ஒரு சான்று:
திருப்பாதிரிப்புலியூரில் வாழ்ந்த இரத்தினம் என்பவர் அடிமை பத்திரம்வழி, உடல் பொருள் ஆவியைப் பெருமானுக்கு ஒப்படைத்தார் அவர்தம் விண்ணப்பத்தைப் பற்றி அவரே பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"நான் பிறந்த காலத்தில் என் தாய் தந்தையர்களால் அண்ணாமலை என்று நாமகரணம் செய்யப்பட்டு இருந்தது. எனக்கு ராமலிங்க சுவாமிகளால் ரத்தினம் என்ற பெயர் 8வது வயதில் இடப்பட்டது. எங்கள் குடும்பம் என் தகப்பனார் காலம் முதல் சுவாமிக்கு அடிமைப்பட்டு பத்திர மூல்யமாய் உடல் பொருள் ஆவி மூன்றும் தத்தம் செய்து அடிமைப்பத்திரம் என் தகப்பனார் எழுதிக் காடுத்திருந்தார். நான் சுவாமியோடு கூடவே இருந்து அவருக்கு அடிமை செய்து வந்தேன்."
இவ்வாறு அன்பர்கள் பலர் ஆர்வத்தோடு வள்ளற் பருமானிடம் அடிமைச்சாசனம் சமர்பித்துள்ளனர். வழி வழித் தொண்டர்தம் பெருமை எதனாலும் அளக்கும் தகுதி உடையதன்று. அன்பர்கள் கொள்ளும் ஆர்வத்தினை போல் கல்பட்டு ஐயாவும் நம் பருமானின் திருச்சமூகத்திற்கு அடிமைப் பத்திரம் செய்து தர முன் வந்தனர். ஆனால் ஒரு பெரு வியப்பு! கல்பட்டு அடியவருக்கும் நமது பெருமானே திருக்கைச் சார்த்தி அடிமைச் சாசனம் வரைந்தருளினார்கள். இந்நிகழ்ச்சி வள்ளல் மேட்டுக்குப்பத்தில் விளங்கிய போது 12.5.1872-ல் நிகழ்ந்தது அவ்விண்ணப்பம் ன்வருமாறு அமைந்துள்ளது:
25. போநாச வந்தனம் செய்த விண்ணப்பம்
உ
ஸ்ரீபார்வதிபுரம் என்னும் உத்தர ஞான சிதம்பரத் திருப்பதிக்கண்ணே அகிலாதாரமாய் விளங்கும் ஸ்ரீசமரச வேத சன்மார்க்க சங்கத்துப் பெருந்தலைப் பதியாக வீற்றிருந்தருளும் அருட்பெருஞ்ஜோதியராகிய எமது ஆண்டவனார் திருச்சந்நிதிக்கு யான் எனும் போதநாச வந்தனஞ் செய்த விண்ணப்பம்:
எம் இறையவரே!
இதுபரியந்தம் யானாகத் தேடியதோர் பொருளென்பது இல்லையாகவே;
தேவாரீர், பெருங்கருணையால் என்னை உய்யக் கொள்ள உபகரித்தருளிய உடல் பொருள் ஆவி என்னும் மூன்றையும் அறியாமையால் யான் எனது கொண்டதோர் சுதந்தரமானது துன்ப இன்ப விளைவுக்கு ஆதாரமாய் இன்றைய வரைவில் என்னைப் ற்றி இருந்தது ஒன்றை யான் பெரும் பொருளாக எண்ணி நின்றனன்.
ஆதலால் அச்சமரச சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் சமூகத்து நிற்கப்பெற்ற விசேடத்தால் அத்தற்சுதந்தரப் பொருளைத் தேவார் பெருங்கருணைச் சந்நிதி முன்னே அர்ப்பித்தனன்.
இனி, தேவரீர் அதனை அருள்வசமாக்கி ஏழையாகிய என்னையும், என்னையடுத்த சுற்றம், என்னோடு பழகிய நட்பினர் ஆதியரையும் உய்யக்கொண்டருளுக.
ஆங்கீரச -ளு; வைகாசி-மீ முதல்உ;மேட்டுக்குப்பம்
இங்ஙனம் அடிமை, க.இராமலிங்கம்
"இந்த விண்ணப்பம் கல்பட்டு (இராலிங்க) சுவாமிகளுக்காக சந்நிதானமே எழுதி வைத்தது" என்று ஓர் பிரதியில் இத்திருமுக வரலாறு காணப்படுகிறது என்று எழதியுள்ளார் திருவருட்பா பதிப்பித்த பாலகிருட்டினர்.
26. அடிமைப்பத்திரம்
சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில் வள்ளற்பெருமான் விண்ணப்பித்து அருளியது போலவே இவ்விண்ணப்பமும் அமைந்துள்ளது. சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தோடு இந்த அடிமைப்பத்திரம் மிகவும் தொடர்பு உடையது. ஒவ்வொருவரும் உணர்ந்து உய்வதற்கான பல செய்திகளை முறையே கொண்டது. அதனை ஊன்றி நோக்கின் எத்தனையோ பேருண்மைகள் வெளிப்படுகின்றன.
1. உலகங்கட்குப் பற்றுக் கோடாய் விளங்குவது சமரச வேத சன்மார்க்க சங்கம்
2. அதன் ஒப்பற்ற தலைவராக வீற்றிருப்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே
3. ஆண்டவர் திருச்சந்நிதிக்குத் தற்போதம் நாசமடைய விண்ணப்பிக்க வேண்டும்.
4. நாமாகத் தேடியது உடலும் அன்று; உயிரும் அன்று உடைமையும் அன்று
5. இறைவர் பெருங்கருணையினாலே அம்மூன்றும் நமக்கு அருளப்பட்டன.
6. அவற்றில் நமக்கு எவ்வித உரிமையும் இல்லை ஆண்டவர்க்கே அம்மூன்றும் உரிமையுடையன
7. அறியாமையினால் அவற்றை நம்முடையவை என் நம்புகிறோம்.
8. வள்ளற்பெருமானை ஒத்த சன்மார்க்க சங்கத்து சாதுக்கள் திருமுன்பு பழக நேரின் நாமும் உரிமையல்லாத அப்பொருள்களை ஒப்படைக்க முன் வருவோம்.
9. தற்சுதந்தரம் நீங்கிய இடத்து தான் திருவருள் சுதந்தரம் கைகூடும்.
10. தன்னை ஏற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் போது தன்னைச் சார்ந்தவர்களையும் ஆட்படுத்தி உய்விக்க வேண்டுதல் வேண்டும்.
மேற்கண்ட ஒப்பற்ற உயரிய செய்திகள் அவ்விண்ணப்பத்தில் காணப்படுகின்றன; நினைத்தற்கரிய கருத்துகள் அவை; கேட்டற்கரிய உயிர் உணர்வுகள் அவை; அவற்றை நெஞ்சகத்து வைத்துப் போற்றிப் பின்பற்றல் நம்கடன்.
இவ்வளவு அருமை வாய்ந்த விண்ணப்பம் யாருக்காக வரையப்பட்டிருக்கிறது? யார் வரைந்தருளியிருக்கின்றார்கள்? பெறும் பொறுப்பும் பெரும் பேறும் பெற்று நின்ற தகுதி வாய்ந்த பக்குவர் கல்பட்டு ஐயா என்பதனால்தான் நமது பெருமானே அவ்விண்ணப்பத்தினை வரைந்தருளினார்கள்; ஒப்பமும் பெற்று வைத்துக் கொண்டார்கள்.
அவ்வாறு கல்பட்டு ஐயா உடல் பொருள் ஆவி மூன்றையும் தம் சற்குருநாதருக்கு ஒப்படைத்தார். அவர்கள் கட்டளை இட்ட வழியில் நின்று வாழ்ந்திட உறுதியோடு முற்பட்டார்.
27.அருள் நடம்
எவ்வுலகும் தன் அருள் ஆணையின் கீழ் விளங்கி உய்ய ஞான சிங்காதன பீடத்து அமர்ந்து, அருட்பெரும் தலத்து மேல்நிலையில் செங்கோல் செலுத்தி, அருள் ஆட்சி புரிந்து அருட்பெரும் போகம் சர்வ சுதந்தரத்துடன் துய்த்திருத்தல் பொருட்டாக எவ்வுலகும் அறிய அருள்சத்தியைத் திருமணம் புரிந்தருளி, எங்கும் எவ்விடத்தும் எவ்வுயிரின்பாலும் நம் பெருமான் அருள்நடம் செய்தருளும் காலம் வந்துற்றது.
28.சித்திவளாகத்தில் கல்பட்டு ஐயா
1874 ஆம் ஆண்டு ஸ்ரீமுக தைத்திங்கள் பூச நல் நாளில் நம் பெருமான் திருக்காப்பிட்டுக் கொண்டார்கள்.
அவ்வமயம் உண்மை அன்பர்கள் பலர் சூழ்ந்திருந்தனர். அடிமைபூண்ட நேயர்கள் பலர் குழுமி நின்றனர். பெருமானின் கட்டளையின் வண்ணம் திருவறை திருக்காப்பிடப்பட்டது. அவ்வாறு திருக்காப்பிட்டவர்களுள் முதன்மையானவர் கல்பட்டு ஐயா. வள்ளலின் நிறைவின்போது, அவர்களின் கட்டளையை
நிறைவேற்றும் பெரும்பேறு கல்பட்டு அடியவர்க்கும் கிடைத்தது! திருவருள் ஆணையை நிறைவேற்றும் முதன்மையாளராகக் கல்பட்டு ஐயா விளங்கினார்.
"சுவாமிகள் திருக்காப்பிட்டுக் கொண்டதும் கல்பட்டு ராமலிங்க சுவாமிகளும் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களும் வெளியில் பூட்டிட்டு சீல் வைத்தார்கள்"
என்று இதுபற்றிச் சத்திய ஞானசபை வழிபாட்டு விதிகளைக் குறித்து 23-2-1928ல் வாக்குமூலம் அறிவிப்பு கொடுத்திட்ட திருப்பாதிரிப்பூலியூர் இரத்தினம் என்பவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு நம்பெருமான் ஆணையிடும் இன்றியமையாக் கடமைகளை கல்பட்டு ஐயா நிறைவேற்றும் பொறுப்பினைப் பெற்று விளங்கினார்.
29.சாலைப்பணி
வள்ளல் அனைத்துயிரினும் நிறைந்து விளங்கும் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் திருக்காப்பிட்டுக் கொண்டபின் சத்திய தருமச்சாலையை நடத்துவிக்கும் பொறுப்பினை கல்பட்டு ஐயா ஏற்றுக் கொண்டார் அவ்வாறு மேற்கொண்டு நடத்துவிக்கும் பொறுப்பினை நமது பெருமான் கல்பட்டாருக்கே வழங்கியருளினார்கள்.
ஈரமும் அன்பும் கொண்டு இன்னுயிர்களை ஓம்பும் வேள்வியை அருமைக் கல்பட்டார் செய்துவந்தார். பெருமானின் கருத்தின்படி பசிப்பிணி மருத்துவத்தை அல்லும் பகலும் ஓயாமல் தொடர்ந்து செய்தார். ஓரிரண்டு ஆண்டுகள் அல்ல; ஒருபத்து ஆண்டுகளும் அல்ல; சற்றேறக்குறைய கால் நூற்றாண்டு அதாவது 25 ஆண்டுகளுக்கும் பக்கமாக சாலைப்பணியினை நயந்து நடத்தினார். அதனால் இம்மை மறுமை பேரின்பத்தால் நிறைகின்ற பெரும்பயனாம் விளைவையெலாம் தருமச்சாலையிலே பெற்றுக் கொண்டார் இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் அல்ல; மெய்மைகளே ஆகும். அதற்கான விளக்கங்களை வடலூர் தெய்வ நிலையங்களின் அலுவலகப் பதிவேடுகள் காட்டுகின்றன!
30.வழிவழித்தொண்டர்கள்
சாலைப்பொறுப்பு 1901 வரையில் கல்பட்டு அடிகள் கண் காணிப்பில் இருந்து வந்தது. 6-2-1902ல் அப்பொறுப்பினைத் தமது மாணவராகிய சுப்பராய பரதேசி என்பவரிடம் ஒப்புவித்தார். சுப்புராயர் தெலுங்கு நாட்டுக்காரர். அவர் தொண்டு புரியவே விரும்பி வந்தவர். கல்பட்டு ஐயா வழி, வள்ளற்பெருமானை நன்கறிந்து எதிரற்ற அன்புகொண்டவர். அவருக்கு உதவியாக சாலைப்பணிகளில் தோய்ந்தவர் கட்ட முத்துப்பாளையம் நாராயணர் ஆவார். அவரே 1927ல் பிரபவ வைகாசி 11ஆம் நாள் சாலைத்திருப்பணி முடித்தவர். இச்செய்தியினை பிறையாறு சிதம்பரம் சுவாமிகள் பின்வருமாறு குறிக்கின்றார்.
"குறிபிட்ட நாராயணர் அவர்களே சாலையை நீண்டநாள் கல்பட்டு ஐயாவுக்குப் பின் அவர் மாணாக்கராயிருந்து அவர் ஆணைப்படி சத்திய தருமச்சாலையை நடத்தி வந்த தெலுங்கு தேசத்து சந்நியாசியாகிய சுப்பராய சுவாமிகளுக்கு உறுதுணையாக இருந்து சென்ற பிரவச வருஷம் வைகாசி 11ந் தேதி சுமார் 37 வருஷங்களுக்கு முன் சாலை கட்டிடத் திருப்பணி வேலையை முடித்துப் பிரவேச விழா நடத்தி ஆண்டவன் அருளுக்குப் பாத்திரமானார்"
இதிலிருந்து தொண்டுள்ளம் கொண்டு நெறி நின்ற தொண்டர்களை கல்பட்டு ஐயா உருவாக்கினார்; அவர்கள் தொடர்ந்து சாலையை நடத்தி வந்தனர் என்பது கண்கூடு. இதுபற்றிய சான்றினை 1896 சனவரியில் வெளிவந்த டிரஸ்டு மறுப்புப் பத்திரிகை தெரிவிக்கின்றது.
"வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொண்ட காலமுதல் வள்ளலார் குறிப்பின்படித் தருமச்சாலையில் தரும பரிபாலனம் சிலகாலம் சில சந்நியாசிகள் கூடி நடத்திக் கொண்டு வந்தார்கள்" இதனால் கல்பட்டு அடியவரும் வழிவழித் தொண்டர்களும் சாலையை நடத்தியது புலனாகின்றது.
31.சமாதி அடைதல்
வள்ளல் வழியில் மாறாத அன்புகொண்டு பணிசெய்தும் பரஞ்சுடர் கண்டுநிற்கும் யோகம் செய்தும் ஏறக்குறைய 35 ஆண்டுகள் வடல்வெளியில் வாழ்ந்த கல்பட்டு ஐயா, சுபகிருதுஸ்ரீ, சித்திரைமீ 14 ஆம் நாள்(26-4-1902) சனிக்கிழமை, கேட்டை விண்மீன் சதுர்த்தசி கூடிய நாளில் சிவயோகச் சமாதி கொண்டிட்டார்.
அன்பர்கள் அவரைச் சாலையின் கீழ்ப்புறத்தில் அடக்கம் செய்தனர். அங்கே கோயிலும் எடுத்துள்ளனர். நினைவு ஆலயமாக இன்று அவைருக்கும் அது வழிகாட்டி நிற்கிறது.
அதன் முன்பு மேலும் மூன்று சாமாதிகள் உள்ளன. கிழக்குப் புறத்தில் உள்ளது சுப்பராய பரதேசியார் சமாதி; மேற்புறத்தில் உள்ளது நெல்லூர் ஐயர் சமாதி; நடுவிலுள்ளது பிற்காலத்துக் கொண்டார் சமாதி.
தொண்டு செய்து நம் வாழ்வை நற்பயன் உடையதாக்கி, அங்கே சமாதி கொண்டுள்ள தொண்டர்கள் அனைவரும் நல்வழி காட்டிகளாவர்.
32.கல்பட்டு சுவாமிகள்
கல்பட்டு ஐயாவை, "கல்பட்டு இராமலிங்க சுவாமிகள்” என்று மிகவும் மதிப்போடு அன்பர்கள் குறிப்பிட்டு வந்தனர்; சான்றாகச் கடிதப்பகுதியில், 'போதநாச வந்தன' அடிக்குறிப்பில், "கல்பட்டு இராமலிங்க சுவாமிகளுக்கான” என்ற செய்தியினை அன்பர் ஒருவர் வரைந்திருப்பதாகப் பதிப்பாசிரியர் பாலகிருட்டினர் குறிப்பிடுகின்றார்.
மேலும் தொழுவூரார் திருமகனார் திருநாகேசுவரர் மார்க்கண்டேய புராண தொ. வே. வரலாற்றில், 'கல்பட்டு இராமலிங்க சுவாமிகள்” என்று வரைந்துள்ளார்.
சத்திய ஞானசபை பற்றிய வாக்குமூலம் குறிப்பில் திருப்பாதிரிப்பூலியூர் இரத்தினம் என்பார் "கல்பட்டு இராமலிங் சுவாமிகள்” என்று எழுதியுள்ளார்.
பொதுவாகச் சுவாமிகள் என்று பலர்க்கும் வழங்குவது போல் கல்பட்டு ஐயாவுக்கும் வழங்கப்பட்டதல்ல; எல்லாம் உடையவ ஆட்கொண்டதால் அப்பெயர் நிலவி வருகிறது. இவ்வாறு அன்பர்களால் மிகவும் மரியாதையுடன் அழைக்கப்படுகின்ற உயர் நிலையினை உற்றுக் கல்பட்டு ஐயா விளங்கினார்.
33.கல்பட்டு மூர்த்திகள்
நமது பெருமான் திருநறுங்குன்றத்திற்கு 1866-ல் வரைந் கடிதத்தில் கல்பட்டு ஐயாவைச் "சிவஞான விருப்பினராகிய இராமலிங்க மூர்த்திகள்” என்று குறித்தார்கள்.
சிவயோகப் படியினைக் கடந்து விட்டவர் கல்பட்டு அடியவர். சிவஞானம் பெறும் பெற்றியினை அடையும் விருப்பத்தை உடையவர் அவர்.
நம்பெருமானோ சிவஞானிகள்; கல்பட்டாரோ சிவஞான விருப்பினர்;
ஆதலில், பெருமானிடத்து மாறாத விருப்பினர் என்றும் சிவஞான நிலையினை அடைவதிலும் என்றும் மாறாத விருப்பினர் என்றும் தெரிகிறது.
அத்துடன் கல்பட்டு ஐயாவை இராமலிங்க மூர்த்திகள் என்ற சிறப்புக்கொடுத்து குறிப்பிடுகின்றார்கள் வள்ளல். மூர்த்திகள் என்னு சொல்வள அமைப்பினைக் காணுங்கால் கல்பட்டு ஐயா மூர்த்திகள் பதம் பெற்றவராக விளங்கினார் என்று தெரிகிறது. சுந்தரமூர்த்தி திரிமூர்த்தி, பஞ்சமூர்த்தி, தட்சணாமூர்த்தி, புண்ணிய மூர்த்தி முதலா தொடர்களை ஆழ்ந்து எண்ணிடல் வேண்டும். அதன்பின் இராமலிங் மூர்த்திகள் என்பதையும் எண்ணிடல் வேண்டும். பெருமான்பால் சூழ நின்ற அன்பர்களுள் கல்பட்டு ஐயாவே மேற்குறிப்பிட் மூர்த்திகளுக்கான பதத்தகுதியினைப் பெற்று விளங்கினவர் என்ற தெரிகிறது.
34.வழிபாட்டு முறைமை
ஆதலினால்தான் பெருமானின் வழிபாட்டோடு நாளும் கல்பட்டடு ஐயாவுக்கும் வழிபாடு நடத்து வருகிறது. குருவாரங்களிலும் பூசநாட்களிலும், வள்ளல் அவதார நாளிலும், வைகாசி 11, தைப்பூச போன்ற சிறப்பு நாட்களிலும், சாலையை வலம் வருவதுபோல் அன்பர்கள் கல்பட்டு ஐயா கோயிலினை வலம் வந்து பாடிப் பரவி பணிந்து, ஆராதனை செய்து, வழிபடுகின்றார்கள்.
அங்கு சை அடியார் நால்வருக்குமான வள்ளல் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாடல்களைத் தோத்திரம் செய்கிறார்கள் அப்படியானால் கல்பட்டாரும் நான்கு அடியார்களைப் போல ஓர் அடியாராகச் சன்மார்க்கத்தில் திகழ்கின்றார் என்று கொள்ளத் தானே!
ஆதலால் மரபு தெரிந்த அன்பர்கள் பலரும் வழிபட வருங்கால் முதன்முதலில் கல்பட்டு ஐயாத் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுகின்றார்கள்; ஒருமை உணர்வோடு உள்முகத்தில் ஒன்றியும் அங்கே அமர்கின்றார்கள். மேலும் அப்போது வெளிப்படுகின்ற உணர்ச்சிப் பெருக்கால் தமக்கு வேண்டிய இம்மை மறுமைப் பேரின்பங்களை விண்ணப்பிக்கும் முன்நிலை இடமாக அவ்விடத்தை கொள்கின்றார்கள். அவ்வகையில் கல்பட்டு ஐயாவிடத்தில் பரிசுத்த உள்ளத்தோடு வழிபாடு செய்து பெருமானிடத்தில் உண்மை உணர்வுடன் வழிபட்டுப் பல பயன்களை அன்பர்கள் பெற்று வருகிறார்கள்.
சிவ ஆலயங்களில் விநாயகருக்கு முதல் வணக்கம் செலுத்துவது போல் முறைதெரிந்த அன்பர்கள் வடல்வெளியில் முதல் வழிப்பாட்டினைக் கல்பட்டு அடிகளுக்குச் செலுத்துகின்றனர். அதற்குக் காரணம் கல்பட்டு அடிகளுக்கும் வடலூரின் காவல் தெய்வமாக விளங்குகின்றார் என்று பலரும் நம்புவதே ஆகும்.
35.கல்பட்டு ஐயா தோற்றம்
சிவந்த மேனி; எடுப்பான தோற்றம்; வாட்ட சாட்டமான உருவம்; நீண்டு மார்பில் அலைபாயும் தாடி; இடையில் ஒரு முண்டு; கையில் ஏற்றதொரு தண்டு; தோளில் மடித்துப் போட்டிருக்கும் துப்பட்டி; நடையில் மிடுக்கு. இந்தக் காட்சிக்கு உரிய தவவடிவமே கல்பட்டு ஐயா!
36.வழிபட்டு வள்ளலைக் காண்போம்!
"வள்ளற்பெருமானிடத்து ஆராக் காதல் கொண்ட அடியவரே! உள்ளம் தன்னில் அவர்கள் வைத்து உணர்ச்சி வழிபாடு செய்துவந்த பெரியவரே! வடல் பெருவெளியின் காவல் தெய்வமே! கல்பட்டின் ஐயாவே! சிவஞான விரும்பும் செல்வரே! திருநறுங்குன்றத்து இராமலிங்க மூர்த்திகளே! வள்ளற்பெருமானை வகைதெரிந்து வணங்கவும்; வருபயன் உயிர் இரக்கதாலேயே என்று உணரவும்; கருங்கல் மனம் கரைந்து, கண்ணீர் பெருகி ஆன்ம உருக்கத்துடன் அவ்வழி நிற்கவும் குறிப்புணர்த்துங்கள்! ஆட்கொள்ளும் வழியினைக் காட்டுங்கள்!" என்று வழிபட்டு வள்ளலைக் காண்போம்.
சிவநேச வெண்பா
இப்பாரில் என்பிழைகள் எல்லாம் பொறுத்தருள் என்
அப்பாநின் தாட்கே அடைக்கலம்காண்.. இப்பாரில் நான்நினது
தாள்நீழல் நண்ணுமட்டும் நின்அடியர்
பால்நினது சீர்கேட்கப் பண்.